தமிழ்நாடு

tamil nadu

சென்னை தொழிலதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் கைது

By

Published : Jun 11, 2022, 4:17 PM IST

்திருமங்கலம் முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன்
திருமங்கலம் முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன்

தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் சரவணனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

சென்னை: 2019ஆம் ஆண்டு அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து, சொத்துக்களை அபகரித்ததாக பாதிக்கப்பட்ட தொழிலதிபர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு 2021ஆம் ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

10 பேர் மீது வழக்கு:இதைதொடர்ந்து, தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக திருமங்கலம் முன்னாள் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா, சங்கர், ஆந்திர தொழிலதிபர்கள் உள்பட 10 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஐந்து பேர் கைது: இந்த வழக்கில், கோடம்பாக்கம் ஸ்ரீ (எ) ஸ்ரீகுமார், ஆந்திர தொழிலதிபர் வெங்கட சிவநாக குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த உதவி காவல் ஆணையர் சிவகுமார் உள்ளிட்டோருக்கு இடம், பணம் கொடுத்து உதவியதாக சவுக்கத் அலி, நந்தகுமார், சரவணகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சரவணன்சிக்கினார்:இந்த நிலையில் தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் சரவணன் மதுரவாயல் அருகே நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் நேற்று (ஜூன் 11) இரவு அங்கு சென்று நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த ஆய்வாளர் சரவணனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சரவணனை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த ஆய்வாளர் சரவணன் போலீசார் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள உதவி ஆணையர், உதவி ஆய்வாளர், உள்ளிட்டோரை போலீசார் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:யார் அந்த "மங்கி குல்லா" கொலையாளி?: தேடித்தவிக்கும் கன்னியாகுமரி போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details