தமிழ்நாடு

tamil nadu

ஜெ., வேதா நிலையம் வழக்கு: அரசு கையகப்படுத்தியது சட்ட விரோதம் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

By

Published : Jan 5, 2022, 11:08 AM IST

Updated : Jan 5, 2022, 12:36 PM IST

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதற்காக, தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தியது சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, முந்தைய அதிமுக அரசு கையகப்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, கடந்த நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம் நபர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு இவ்வழக்கில் இன்று (ஜனவரி 5) தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், "நிலம் கையகப்படுத்ததப்பட்டதில் நடைமுறை தவறுகள் உள்ளதா? பொதுப் பயன்பாடு உள்ளதா? அப்படி பொதுப் பயன்பாடு இருந்தால் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மீண்டும் தொடர அரசுக்கு உத்தரவிடமுடியுமா?" போன்ற கேள்விகள் எழுந்ததாகக் கூறி அதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

அதிமுக கூறுவதை ஏற்க முடியாது

மேலும் நீதிபதிகள், "நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகளை ஆய்வு செய்ததில் தனியார் சொத்து என்ற முறையில் அதன் உரிமையாளரின் கருத்தை கவனத்தில் கொள்ளாமல், அவர்களின் நிலையை ஏற்றுக்கொள்ளாமல் வேதா நிலையத்தை கையகப்படுத்தியதில் தவறுகள் நடந்துள்ளது என்ற தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை.

நிலம் கையகப்படுத்தப்பட்டதில் பொதுப் பயன்பாடு ஏதும் இல்லை. ஆட்சியில் இருந்ததால் தீபா, தீபக் ஆகியோரின் வழக்கை எதிர்கொண்டதாகவும், தற்போதைய ஆளும் அரசு மேல்முறையீடு செய்யாததால் நீதிமன்றதை நாடியதாகவும் அதிமுக கூறுவதை ஏற்கமுடியாது.

இரண்டாவது நினைவிடம் எதற்கு?

இதில், நடைமுறை தவறுகள் உள்ளது. பொதுப் பயன்பாடும் இல்லை. மேலும், சொத்து உரிமையாளர் விருப்பத்திற்கு முரணாக கையகப்படுத்தபட்டு உள்ளதால், தனி நீதிபதி உத்தரவில் தலையிட அவசியமில்லை" என கூறி அதிமுக மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, "தனி நீதிபதி உத்தரவை ஏற்று வாரிசுதாரர்களிடம் சாவி கொடுக்கப்பட்டதால், மீண்டும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கும்படி அரசுக்கு உத்தரவிடுவது முறையாக இருக்காது. ஏற்கனவே மெரினா கடற்கரையில் நினைவிடம் உள்ள நிலையில், இரண்டாவதாக ஒன்றை அமைக்க அரசுக்கு உத்தரவிடுவது சட்டபூர்வமாக இருக்காது" என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Governor Speech: ஆளுநர் உரை: ஸ்டாலினுக்கு ஆளுநர் பாராட்டு, அதிமுக, விசிக வெளிநடப்பு...

Last Updated :Jan 5, 2022, 12:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details