தமிழ்நாடு

tamil nadu

செல்போன் பறிப்பு வழக்கு... தப்பிய 17 வயது சிறுவனை பிடிக்க தனிப்படை..

By

Published : Sep 22, 2022, 7:08 AM IST

Etv Bharat
Etv Bharat

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் தப்பிய 17 வயது சிறுவனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை: வடபழனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செல்போன் பறிப்பு வழக்கு ஒன்றில், சிசிடிவி பதிவுகளை வட பழனி போலீசார் ஆய்வு செய்தனர். அதில், செல்போன் பறிப்பில் ஈடுபட்டது போரூரைச் சேர்ந்த சஞ்சய் (17) மற்றும் இரு இளஞ்சிறார்கள் என்பதை கண்டுபிடித்தனர்.

அதன் அடிப்படையில் நேற்றிரவு சஞ்சயை கைது செய்த வடபழனி போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனையும் கைது செய்ய அவனது வீட்டிற்கு சென்றனர்.

அப்போது சிறுவனின் தந்தை முரளி (41), தாய் மீனாட்சி (36) மற்றும் உறவினர் காவேரி (48) ஆகியோர் சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். மேலும், கற்களை வீசி வடபழனி காவல்துறையினரின் காவல் வாகனத்தின் பின்புற கண்ணாடியை உடைத்தனர். இச்சம்பவத்தால் போலீசார் சுதாரிப்பதற்குள் சிறுவன் சஞ்சய் அங்கிருந்து தப்பிச் சென்றான்.

அதனைத் தொடர்ந்து, சஞ்சயின் கூட்டாளியான மற்றொரு சிறுவனையும் கைது செய்து, சம்பவம் தொடர்பாக கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ் பாபுவுக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் உதவி ஆணையர் உத்தரவின் பேரில் சஞ்சையை கைது செய்யவிடாமல் தடுத்து, தப்பிக்க வைத்து காவல்துறை வாகனத்தையும் சேதப்படுத்திய தந்தை முரளி, தாய் மீனாட்சி மற்றும் உறவினர் காவேரி ஆகிய 3 பேரை பிடித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பியோடிய சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details