தமிழ்நாடு

tamil nadu

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு: ஆகஸ்ட் 4 ஆம் தேதி விசாரணை

By

Published : Aug 2, 2022, 5:50 PM IST

ஓபிஎஸ் வழக்கு

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை மறுதினம் (ஆகஸ்ட் 4) விசாரிக்க உள்ளார்.

சென்னை:ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து, பிரதான வழக்குகளை தள்ளிவைத்திருந்தார்.

இதையடுத்து ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், விசாரணையை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அவற்றை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதற்கிடையில் பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை 2 வாரங்களில் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து நீதிபதி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த வழக்குகளை நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம் ஜூன் 23 பொது குழுவுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம் என்ற இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சண்முகத்தின் மேல்முறையீட்டு வழக்கை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளிடம் என்.ஐ.ஏ விசாரணை

ABOUT THE AUTHOR

...view details