தமிழ்நாடு

tamil nadu

நான்கு ஆண்டுகளில் 68 யானைகள் மின்சாரம் பாய்ச்சி பலி: ஆர்டிஐ தகவல் தரும் அதிர்ச்சி!

By

Published : Aug 30, 2021, 9:20 PM IST

ஆர்டிஐ தகவல் தரும் அதிர்ச்சி

முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு யானை - மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றன. வலசை பாதைகளின் ஆக்கிரமிப்பால் யானைகளும், விளைநிலங்கள் சேதமாகுவதால் மனிதர்களும் எல்லை மீறும் போது, இரண்டு பக்கத்திலும் உயிர் சேதம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதில், தன்பலத்தில் மோதும் யானைகளிலிருந்து ஆபத்தான வகையில் மாறுபட்டிருக்கிறது மனிதர்கள் கை கொள்ளும் செயற்கை பலம். இயற்கையின் சமநிலைக்கு அச்சுறுத்தலாகி வரும் இந்த மனித - வனவிலங்கு மோலுக்கு தீர்வு காணச் சொல்லும் இயற்கை ஆர்வலர்கள், யானைகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் மின்சார வேலிகளை முற்றிலுமாக தடை செய்யவேண்டும் என உரக்கக் கூறுகின்றனர்.

சென்னை:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் அண்மையில் பெறப்பட்டத் தகவல் ஒன்று இயற்கை ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; குறிப்பாக யானை காதலர்களுக்கு.

கொச்சியைச் சேர்ந்த ஒரு நபர், 2014 முதல் 2020 வரையிலான ஆறு ஆண்டுகாலத்தில் இந்தியாவில் மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கேட்ட கேள்விக்கு, 747 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

இந்திய அளவிலான இந்த எண்ணிக்கையில் நான்காவது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு, தென்னிந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், 68 யானைகள் மின்சாரம் பாய்ந்து கொல்லப்பட்டுள்ளன. நமக்கு அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா கேரளா மாநிலங்கள உள்ளன.

களவாடப்படும் வலசை பாதைகள்

இந்த மூன்று மாநிலங்களையும் இணைத்தபடி நீளுகிறது மேற்குமலைத் தொடர். தக்காண பீடபூமியில் நீண்டு கிடக்கும் இதன் பகுதியான பந்திப்பூர், வயநாடு, நாகர்கொளேவிலிருந்து சமவெளியான கோவை, சத்தியமங்கலம் பகுதிக்கு ஆண்டு தோறும் நூற்றுக்கான யானைகள் வலசை செல்கின்றன. தற்போது இந்த பாதைகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது சில யானைகளை எல்லை மீறச் செய்கின்றன.

யானைகள் வலசை செல்லுதல் என்பது மரபுவழிச் செயல்பாடு. ஆப்பிரிக்க காடுகளில் இருந்து, சுமார் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மேற்கு மலைத் தொடர் பகுதிக்கு வலசையாக யானைகள் தனி இனமாக பரிணமித்துள்ளன. நாளென்றுக்கு, 140 முதல் 270 கிலோ உணவு உட்கொள்ளும் யானைகள் அதற்காக, சுமார் 16 மணி நேரம் செலவு பல கிலோ மீட்டர்களைக் கடக்கின்றன.

ஆண்டாண்டு காலமாய் நடந்து வரும் அறுபடாத இந்த இயற்கை கன்னியில் தற்போது விரிசல் விழச் செய்திருக்கிறது மனிதர்களின் பேராசை. பல நூறாண்டு காலமாய் தங்களுடைய வலசை செயல்பாடுகள் மூலமாக காடுகளை கட்டமைத்து வைத்திருந்த யானைகளிடமிருந்து சமவெளி பரப்புகளை அபகரித்துக் கொண்ட மனித இனம், யானைகளின் வலசை பாதைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. முன்னோர்களின் நினைவுப் பேழைகளின் வழியாக ஆதி தடம் தேடிவரும் யானைகளை வழிமறித்து நிற்கின்றன, யானைகளின் ஆதி முன்னோர்கள் அறிந்திராத மின்சார வேலிகள்.

உயிர்கொல்லி மின்சாரவேலி

காடுகளின் அருகில் இருக்கும் விளைநிலங்களுக்கு மின்சாரவேலி அமைப்பதை தடை செய்வேண்டும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள. இதுகுறித்து விவாசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மின்சாரவேலிக்கு பதிலாக மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்த அவர்களை பழக்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்தவும் செய்கின்றனர்

கடந்த சில ஆண்டுகளாக மனித - யானை மோதல்கள் அதிகரித்துள்ளன எனக் கூறும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி, கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மின்வேலியில் அடிபட்டு மட்டும் 68 யானைகள் உயிரிழந்து உள்ளது. இந்திய அளவில் இந்த எண்ணிக்கை 474 ஆக இருக்கிறது. இதனால் விளைநிலங்களில் மின்சாரவேலி அமைக்க தடை விதிக்க வேண்டும் என்கிறார்.

யானை மனித மோதல்களை தவிர்க்க நாம் உறுதியான நடவடிக்கைகளில் இறங்கியாக வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த பிரச்சினையில் வனத்துறையினரை மட்டும் குறை சொல்லுவதோ, அவர்களை மட்டுமே அனைத்துக்கும் பொறுப்பு என பழிபோடவோ கூடாது.

இந்த புதிய பிரச்சினைக்கு தீர்வு காண யானை வல்லுநர்களின் உதவியை நடவேண்டும் என யோசனை கூறுகிறார்கள் யானை ஆர்வலர்கள். "யானைகளின் நடத்தைகள் தெரிந்த உயிரியல் வல்லுநர்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுடன், விலங்கு ஆர்வலர்கள், கால்நடை மருத்துவர்கள், விவசாயிகளும் கலந்து பேசி, இந்த மோதல்களுக்கான தீர்வுகளை ஆராய வேண்டும். மின்சார வேலி அமைப்பது இதற்கான தீர்வாக இருக்கவே முடியாது. அரசாங்கமும் இதற்காக தனியாக நிதி ஒதுக்கி வல்லுநர்களின் உதவியை நாடவேண்டும்" என்கிறார் அசோக சக்கரவர்த்தி.

மனிதர்களின் கடன் காடுகள்

இந்த சிக்கல் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மின்சாரவேலிகளை கண்காணிப்பதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளோம் என்கிறார் முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஷேகர் குமார் நீரஜ். "மின்சார வேலியில் மிக மெல்லிய அதிர்வை ஏற்படுத்தும் அளவிற்கே மின்சாரம் பாய்ச்ச வேண்டும். அப்படி இல்லாமல் அதிக அளவில் மின்சாரம் பாய்ச்சுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.

யானை மனித மோதல்களை தவிர்ப்பதற்கான முக்கியமான தீர்வு யானைகளின் வலசை பாதைகளில் குறுக்கிடாமல் இருப்பதே. பூமியின் பெரிய உயிரினமான யானைகளுக்கு அளவில் சிறிய தேனிக்களைக் கண்டால் பயம்.


ஆப்பிரிக்காவில், காடுகளை ஒட்டியிருக்கும் விளைநிலங்களில் தேனிக்கள் வளர்க்கப்படுகின்றன. காட்டின் எல்லைக்கு வரும் யானைகள் தேனீக்களின் ரீங்காரத்தால் விளைநிலங்களுக்குள் நுழைவதில்லை.

இந்த முறையை இந்திய வனங்களிலும் பயன்படுத்தலாம். உணரி (சென்சார்) மூலமாக செயல்படும் தனியங்கி முரசு போன்றவைகளைப் பயன்படுத்தி யானைகள் வரும் போது, முரசு மூலமாக சத்தம் எழுப்பி யானைகளை காட்டிற்குள் திருப்பி அனுப்பலாம் என மின்சார வேலிகளுக்கான மாற்று யோசனைகளை முன்வைக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

விளைநிலங்களுக்குள் புகுந்து மின்வேலியில் மாட்டி, அவுட் பழங்களைத் தின்று தாடை சிதறி, ரயில்களில் அடிபட்டு, தீ கொளுத்தி ஏறியப்படும் டயர்களுக்கு காதுகளை இழந்து செத்துப்போவதற்கான உயிரினம் இல்லை யானைகள்.பூமிப்பந்தின் காடுகளை கட்டமைக்கும் கட்டுமான பொறியாளர்கள்.

அவைகளை தொந்தரவு செய்யாமல் இருப்பது நமது கடமை. ஏனெனில் காடுகள் மனிதனின் சொத்துக்களல்ல. அது இயற்கையிடமிருந்து மனிதன் பெற்ற கடன்.

இதையும் படிங்க:மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details