மழை - குளிர் காலத்தில் முடிந்தவரை வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருப்பது அவசியம். ஒருவரின் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பொறுத்தே குளிரைத் தாங்க முடியும். ஆனால், குளிரால் தொற்றையும், தொற்றுக்கிருமியையும் சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.
கோடை காலத்தைவிட, மழை - குளிர் காலத்தில்தான் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவும். மழைக்காலங்களில் எளிதில் பரவுவது வைரஸ் தொற்றுக்கிருமிகள்தாம். சளி, இருமல், காய்ச்சல் போன்றவை, மழை - குளிர்காலத்தில் பெரும்பாலோருக்கு வரும். அதனால், மழைக்காலத்தில் வெந்நீர் பருகுவது நல்லது.
எந்த ஒரு காலகட்டத்திலும் உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை தருவது குடிநீர். ஒரு நாளைக்கு, மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். இவ்வாறு குடித்துவந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படுவதுடன், உடல் பளபளப்பும் ஏற்படும். மழை, குளிர் காலங்களில் வயதானவர்கள் அதிகாலையில் எழுவதைத் தவிர்க்க வேண்டும். அதுபோல, வெயில் வந்தபின், உடற்பயிற்சி செய்யலாம்.
- சளி, காய்ச்சல் வருவதைத் தவிர்க்க, குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- வெளியில் செல்லும்போது, காலில் காலணி அணிந்து செல்லுங்கள்.
- வீட்டிற்குள் வந்ததும், டெட்டால் கலந்த தண்ணீரில், கை கால் கழுவுவது அவசியம்.
- வீட்டிற்குள் இருக்கும்போது, காலில், மெல்லிய சாக்ஸ் அணிந்துகொள்ளலாம்.
- வெறும் தரையில் படுப்பதைத் தவிர்க்கவும்.
- உணவு சூடாக இருக்கும்போதே சாப்பிடுவது நல்லது.
- வீட்டிற்குள்ளும், வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டாலே, பாதிப் பிரச்சினைகள் தீரும்.
- நெருப்பில் வேப்பிலையைப் போட்டு, புகை மூட்டம் ஏற்படுத்தி, வீட்டிற்குள் இருக்கும் கொசு, கரப்பான் பூச்சி போன்றவற்றை விரட்டியடியுங்கள்.
- கழிவறையை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.