ETV Bharat / briefs

உயர்கல்விக்கு பொற்காலத்தை அளிக்கும் அரசு திமுக- மு.க. ஸ்டாலின்

author img

By

Published : May 17, 2022, 4:37 PM IST

உயர்கல்விக்குப் பொற்காலத்தை அளிக்கும் திமுக அரசு இருக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
உயர்கல்விக்குப் பொற்காலத்தை அளிக்கும் திமுக அரசு இருக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் முதல்வன் திட்டத்தை அறிவித்து, அதைச் செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறேன். உயர்கல்விக்குப் பொற்காலத்தை அளிக்கும் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் நீங்கள் இந்தப் பல்கலைக்கழகத்தைத் தொடக்கியிருக்கிறீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் பையனூர், சாய் பல்கலைக்கழகக் கட்டடத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.17) திறந்து வைத்து, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில், அதாவது உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இப்போது 13 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.

இப்போது தனியார் பல்கலைக்கழகமான சாய் பல்கலைக்கழகத்தின் கல்வி கட்டடங்களைத் தொடக்கி வைத்து, மாணவர்களுக்கான உயர்கல்விக்கு இன்னொரு அடிக்கல்லை நாட்டியிருக்கிறேன் என்கிற மன நிறைவு ஏற்பட்டிருக்கிறது. இந்த அரசு உயர்கல்வியில் முதலில் இருந்தே மிகுந்த கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது.

சாய் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்து, புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்
சாய் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்து, புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்

இன்றைக்கு தேசிய உயர்கல்வி மாணவர் சேர்க்கையானது 27.1 விழுக்காட்டை விட அதிகமாக, அதாவது 51.4 விழுக்காடு மாணவர்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றிருக்கிறார்கள். பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், அதற்காக உச்சநீதிமன்ற அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தவர்தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

பள்ளிக் கல்விக்கு பெருந்தலைவர் காமராசர் என்று சொன்னால் - கல்லூரிக்கல்விக்கு கருணாநிதி என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அந்த வகையில் உயர்கல்விக்கு இந்தக் காலம் பொற்காலமாக இருக்கும் என்று நேற்றைக்கு நான் அங்கே வலியுறுத்திச் பேசியிருக்கிறேன். இப்போது அதை இங்கே நான் வலியுறுத்துகிறேன்.

உயர்கல்விக்கு பொற்காலத்தை அளிக்கும் அரசு திமுக.. உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் - ஸ்டாலின்

உயர்கல்வியில் அகில இந்திய மாணவர் சேர்க்கை விகிதத்தைத் தாண்டி தமிழ்நாடு முன்னணியில் நிற்பதற்கு பல காரணிகள் உண்டு. இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும், தமிழ்நாட்டில் ஆராய்ச்சித் துறைகளில் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் மிக முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கிறது.

உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் ஒரு திட்டத்தை அறிவித்து, அதைச் செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறேன். என்னவென்று கேட்டால், “நான் முதல்வன்”என்கிற அந்தத் திட்டம். அதாவது மாணவர்களுடைய திறமைகளை அதிகரித்து, தமிழ்நாடு மாணவர்கள் சாதனைகளை நிகழ்த்தக் கூடியவர்களாக மாற வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அதனுடைய நோக்கம்.

தமிழ்நாட்டின் உயர்கல்விக்குச் சாய் பல்கலைக்கழகம் மிக முக்கியப் பங்காற்றும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. உயர்கல்விக்குப் பொற்காலத்தை அளிக்கும் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் நீங்கள் இந்தப் பல்கலைக்கழகத்தைத் தொடக்கியிருக்கிறீர்கள். நம் இருவரின் நம்பிக்கையையும் காப்போம். நம் மாணவர்களை உயர்கல்வியில் சிறந்த மாணவர்களாக ஆக்குவோம். உயர்கல்விக்குப் பொற்காலத்தை உருவாக்குவோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞரும் இருக்கக் கூடாது - நம்பிக்கை உரை நிகழ்த்திய முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.