தமிழ்நாடு

tamil nadu

மேற்கு வங்கம் துப்குரி இடைத்தேர்தலில் திரிணாமுல் த்ரில் வெற்றி!

By PTI

Published : Sep 8, 2023, 7:51 PM IST

West Bengal Byelection Result: மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்திலுள்ள துப்குரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

west-bengal-dhupguri-byelection-all-india-trinamool-congress-wins
மேற்கு வங்கம், துப்குரி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வி - திரிணாமுல் காங்கிரஸ் த்ரில் வெற்றி

கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்திலுள்ள துப்குரி சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த செவ்வாய்கிழமை (செப்.5) நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணும் பணியானது இன்று (செப்.8) 11 சுற்றுக்களாக நடைபெற்று முடிவடைந்தது. இதில், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்திலுள்ள துப்குரி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பிஷ்ணு பதா ரே கடந்த ஜூலை 25ஆம் தேதி உயிரிழந்தார். இதனால், இத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில், 78 சதவீத வாக்குகள் பதிவாகின. மேலும், வாக்கு எண்ணும் பணியானது இன்று (செப்.8) வடக்கு பெங்கால் பல்கலைக்கழகத்தில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதன் படி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் 97,613 வாக்குகள் பெற்றுள்ளார். பா.ஜ.கவை சேர்ந்த வேட்பாளர் தபசி ராய் 93,304 வாக்குகள் பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஈஸ்வர் சந்திர ராய் 13,758 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் நோட்டாவில் 1,220 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் படி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் 4,309 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:திரிபுரா இடைத்தேர்தலில் 2 தொகுதிகளையும் கைப்பற்றியது பா.ஜ.க!

இதன் முலம் மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்திலுள்ள துப்குரி சட்டமன்ற தொகுதியை பா.ஜ.க விடம் இருந்து அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி X பதிவில், துப்குரி சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வடக்கு வங்காளத்தின் மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள். தற்போது வங்காளம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. விரைவில் இந்தியாவும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி X பதிவில், துப்குரி மக்கள் வெறுப்பு மற்றும் மதவெறி அகற்றி வளர்ச்சியை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அனைத்து அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ஊழியர்களுக்கு அவர்களின் உழைப்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் துப்குரி சட்டமன்ற தொகுதி வளர்ச்சியை உறுதி செய்வதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கேரளாவில் ஆளுங்கட்சியை வீழ்த்திய காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி.. கோட்டயத்தில் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details