டெல்லி: இந்தியாவில் அழிந்துவிட்ட விலங்கினமான சிவிங்கிப் புலிகளை மீண்டும் கொண்டு வந்து இனப்பெருக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி தென் ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கிப் புலிகள் கடந்த 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. ஐந்து பெண் சிவிங்கிப் புலிகள் மற்றும் மூன்று ஆண் சிவிங்கிப் புலிகள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டன.
இந்தப் புலிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி, தனது பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி அன்று இந்தப் புலிகளை பூங்காவில் திறந்து விட்டார். பின்னர் இந்த சிவிங்கிப் புலிகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் சாஷா என்ற பெண் சிவிங்கிப் புலிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனை செய்ததில், அந்த பெண் சிவிங்கிப் புலிக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது தெரியவந்தது. அந்தப் புலிக்கு தொடர்ந்து மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி சாஷா உயிரிழந்துவிட்டது. குனோ பூங்காவில் உள்ள மற்ற சிவிங்கிப் புலிகள் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.