தமிழ்நாடு

tamil nadu

Odisha Train Accident: மனிதநேயம் இறக்கவில்லை.. ரத்த தானம் செய்ய குவிந்த பொதுமக்கள்

By

Published : Jun 3, 2023, 12:10 PM IST

ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்காக, ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலேஷ்வர் மருத்துவமனையில் ஏராளமானவர்கள் குவிந்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

பாலசோர் (ஒடிசா):கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஜூன் 2) பாலசோர் அருகே பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 15 பெட்டிகள் வரை தடம் புரண்ட நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி பொதுமக்களின் உதவியுடன் இரவு பகலாக முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதனிடையே, ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று (ஜூன் 3) ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதேபோல, இந்த ஒரிசா ரயில் விபத்து காரணமாக ஒரு நாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் பாலசோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு ஏராளமான பொதுமக்கள் உள்பட தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்வதற்காக குவிந்துள்ளனர்.இது குறித்து சஞ்சீவ் என்பவர் தனது டிவிட்டரில் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவில், 'பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரயில், சரக்கு ரயில், கோரமண்டல் ஆகிய ரயில்கள் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் இதுவரையில், பலி எண்ணிக்கை 230 ஆக அதிகரித்துள்ளதாகவும் (தற்போதைய நிலையில் 238 பேர் உயிரிழப்பு), சுமார் 900 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகவும்' தெரிவித்துள்ளார்.

மேலும், 'இவர்கள் பாலசோர் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு ரத்த தானம் செய்வதற்காக கூடிய உள்ளூர் பொதுமக்கள்' என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, அபிஷேக் ஜோஷி என்பவர், 'நள்ளிரவில் பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய வரிசையில் காத்திருப்பதாகவும், இங்கு ரத்த தானம் செய்துள்ள ஒவ்வொரு நபர்களுக்கும் வாழ்த்துகள் என்றும், எனது ஒடிசா எந்த நெருக்கடியானாலும் ஒன்றுபடுவோம்' என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஸ்ரேயாஷி டே என்பவரும், 'மனிதநேயம் இறக்கவில்லை. பாலசோரில் ஒரே இரவில் 500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. தற்போது 900 யூனிட்கள் கையிருப்பில் உள்ளன. படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் ஒரே இரவில் வரிசையில் நின்று ரத்த தானம் செய்தனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு டிவிட்டர் பதிவில், 'பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும், இதுதான் நாம் அனைவரும் செய்யக் கூடிய நல்ல விஷயம் என்றும், இந்த பதட்டமான சூழ்நிலையில் அவர்கள் போதுமான அளவு கவனமாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஊசிகளை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என்று நான் நம்புவதாக கூறியுள்ளார். இதுதான் ஒடிசா என்றும், இது மனிதநேயத்திற்காக இவ்வாறு நிற்பது, ஜெய் ஜெகநாத் போல் தெரிவதாகவும்' அவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பல்வேறு ட்விட்டர் பயனாளர்களும், ரத்த தானம் செய்ய மருத்துவமனைக்கு விரைந்தது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஒடிசா ரயில் விபத்து - உலகத் தலைவர்கள் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details