டெல்லி: ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை நேற்றைய முன் தினம் (ஜூன் 2) இரவு ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, நேற்று (ஜூன் 3) பிற்பகலில் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சந்தீப் பதாக் வெளியிட்டுள்ள வீடியோவில், “கடைசியாக நடைபெற்ற ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில், ரயில் பயணிகளின் மீதான கவனம் மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என நான் பரிந்துரை செய்தேன்.
ஆனால், அரசு முழுக்க முழுக்க விளம்பரப்படுத்துதலில் மட்டுமே கவனம் செலுத்தி உள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மீது கவனம் செலுத்தவில்லை. மோதல் எதிர்ப்பு சாதங்கள் விபத்துக்களை தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், இந்தியாவில் உள்ள 65 ஆயிரம் கிலோ மீட்டர் அளவிலான ரயில்வே வழித்தடத்தில், வெறும் 2 சதவீதம் மட்டுமே இந்த சாதனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மோடி தலைமையிலான அரசு, கடந்த 9 வருடங்களில் 2 சதவீத ரயில்வேக்களில் மட்டுமே சாதனங்களைப் பொருத்தி உள்ளது. எனவே, இந்தியா முழுவதும் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர இன்னும் 400 வருடங்களுக்கு மேல் ஆகும். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, இந்தியா முழுவதிலும் உள்ள 23 ஆயிரம் ரயில்களில், 65 ரயில்களில் மட்டுமே மோதல் எதிர்ப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது 0.2 சதவீதத்திற்கும் குறைவாகும்.