ஒடிசாவில் இருந்து சென்னை வந்த சிறப்பு ரயில்.. 133 பயணிகள் வருகை; 8 பேருக்கு சிகிச்சை என அமைச்சர் தகவல்!

author img

By

Published : Jun 4, 2023, 8:08 AM IST

Updated : Jun 4, 2023, 10:11 AM IST

Etv Bharat

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 133 பயணிகள் சென்னை வந்தடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை தழிழ்நாட்டைச் சேர்ந்த எவரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் திரும்பிய 133 பேரில் 8 பேர் சிகிச்சையில் உள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஒடிசா மாநிலத்தின் பாலசோா் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூர் - ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி நேற்று முன்தினம் (ஜூன் 2) விபத்துக்குள்ளானது. இந்த விபத்திலிருந்து மீட்கப்பட்டவா்கள் விமானம் மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

அதன் முதல்கட்டமாக புவனேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை காலை 8.40 மணிக்கு புறப்பட்ட ரயிலில் 190 பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் பெர்காம்பூரில் 4 பேரும், விசாகப்பட்டினத்தில் 41 பேரும், ராஜமுந்திரியில் ஒருவரும், விஜயவாடாவில் 9 பேரும், தடேபல்லிகுதேமில் 2 பேரும் இறங்கினா். மீதமுள்ள 133 பயணிகள் இன்று (ஜூன் 4) காலை சென்னை வந்தடைந்தனர்.

அவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மீட்புத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.

தொடர்ந்து, சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் அவசர சிகிச்சைக்காக பணியமர்த்தப்பட்டுள்ள 30 மருத்துவர்கள் பயணிகளை முதல்கட்ட பரிசோதனை செய்தனர். மேலும், சிகிச்சை தேவைப்படும் சிறிய காயமடைந்த எட்டு பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு பரிசோதனை செய்த பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 133 பயணிகள் சென்னை வந்தடைந்தனர்
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 133 பயணிகள் சென்னை வந்தடைந்தனர்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நேற்றைக்கு முன்தினம் இரவு 7 மணி அளவில் ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்து ஏற்பட்டதை அனைவரும் அறிவோம். தமிழ்நாடு வந்து கொண்டிருந்த ரயிலும் அந்த விபத்தில் பாதிக்கப்பட்டிருந்தது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

உடனடியாக, தமிழ்நாடு முதலமைச்சர் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும், அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரவும் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, சென்னையில் தேவையான சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஆறு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

மேலும், 350 மருத்துவர்களும் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த 133 பயணிகளில் 8 பயணிகளுக்கு மட்டுமே தற்போது வரை சிகிச்சை தேவைப்படுகிறது. அவர்களும் லேசான காயங்களுடன் இருப்பதால், அவர்களையும் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வாகனங்களில் வீட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மற்றவர்கள் நேரடியாக பேருந்து மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதுவரை யாருக்கும் அதிதீவிர சிகிச்சை தேவை இல்லை. 8 பேர் மட்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் இதுவரை உயிரிழந்ததாக தகவல்கள் இல்லை. ரயில் நிலையத்தைப் போன்று விமான நிலையத்திலும் மருத்துவக் குழு நிறுத்தப்பட்டுள்ளது” என கூறினார்.

இதையும் படிங்க: Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்து… திரைப்பிரபலங்கள் இரங்கல்!

Last Updated :Jun 4, 2023, 10:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.