தமிழ்நாடு

tamil nadu

சாலையின் நடுவே மயங்கிய மாற்றுத்திறனாளி.. ஓடிவந்து உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! - Blind person fainted of Sunstroke

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 4:01 PM IST

மதுரை வெயிலின் தாக்கத்தால் சாலையின் நடுவே மயங்கி விழுந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி

மதுரை: தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பிற்பகல் நேரங்களில் அவசியமின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில், இளநீர், மோர், நுங்கு ஆகிய குளிர்ச்சியான இயற்கைப் பொருட்களை உட்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

அந்த வகையில், மதுரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் தொடர்ந்து நாள்தோறும் சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மறவன்குளம் பகுதியில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். 

அப்போது கடும் வெயிலைத் தாக்குப்பிடிக்க முடியாமல், அவர் சாலையிலேயே மயங்கி விழுந்துள்ளார். அந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடந்து சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் காவலர் ஆகிய இருவரும், உடனடியாக அவரை மீட்டு சாலை ஓரத்திற்கு அழைத்து வந்து தண்ணீர் கொடுத்து உதவியுள்ளனர். 

இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் மதுரை வெயிலின் கொடூரத்தை உணர்த்தியதோடு, சரியான நேரத்தில் அப்பார்வையற்ற மாற்றுத்திறனாளியைக் காப்பாற்றிய காவலர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details