சென்னிமலை சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!
Published : Feb 4, 2024, 6:35 PM IST
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர், விஸ்வநாதன். விவசாயம் செய்து வரும் இவர், தனது காரில் குடும்பத்துடன் பெருந்துறையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்று உள்ளார். அப்போது, சென்னிமலை பெரியார் நகர் பகுதியில் உள்ள கேஸ் பங்கில் காருக்கு கேஸ் நிரப்பி விட்டுப் புறப்பட முயன்றுள்ளார். அப்போது, காரானது ஸ்டார்ட் ஆகவில்லை எனத் தெரிகிறது.
இதனால் வண்டியைத் தள்ளி ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது, காரின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஸ்வநாதன், காரில் என்ன கோளாறு என்று பார்ப்பதற்குள், கார் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கி உள்ளது. நல்ல வாய்ப்பாக காருக்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த சென்னிமலை தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர். இருப்பினும், கார் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. மேலும், இச்சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் நடத்தி வருகின்றனர். கேஸ் பங்க முன்பே கார் தீ பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.