தமிழ்நாடு

tamil nadu

வேலூரில் கிணற்றில் மூழ்கி தாய் உட்பட 2 குழந்தைகள் பலி! - நீச்சல் பழகியபோது விபத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 11:02 PM IST

Three Person Died: வேலூர் அருகே கிணற்றில் நீச்சல் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த தாயும், அவரது 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்
வேலூர்

வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(40). இவரது மனைவி பவித்ரா(30). இத்தம்பதியினரின் ரித்திக்(9) என்ற மகனும், நித்திகா ஸ்ரீ(7) என்ற மகளும் உள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி இன்று (ஏப்.29) பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகத் தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கியுள்ளனர்.

நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வீடு திரும்பாத நிலையில், சிறுமி நித்திகா ஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாகக் கிடந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் நீர் நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கனமழையால் தத்தளிக்கும் ஆப்பிரிக்க நாடுகள்! கென்யாவில் அணை உடைந்து 45 பேர் பலி! - Kenya Dam Collapse

ABOUT THE AUTHOR

...view details