தமிழ்நாடு

tamil nadu

"தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி" தயாரான தமிழக பட்ஜெட்.. லோகோவை வெளியிட்ட தமிழக அரசு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 6:00 PM IST

TN Budget logo released: தமிழ்நாட்டின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை (பிப்.18) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், "தடைகளைத் தாண்டி" என்னும் அதற்கான லோகோவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

TN Budget logo
தமிழக பட்ஜெட்

சென்னை:தமிழ்நாட்டின் நிகழ் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்.12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 2024-25ஆண்டுக்கான தமிழகத்தின் நிதிநிலை பங்கீடு குறித்த தகவல்கள் நிறைந்த பொது பட்ஜெட்டை நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (பிப்.19) காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான லோகோவை தமிழக அரசு இன்று (பிப்.18) வெளியிட்டுள்ளது.

“தடைகளைத் தாண்டி” 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கும் முத்திரைச் சின்னம்

என்னருந் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங் கலை ஞானத்தால் பராக்கிரமத்தால் அன்பால்

உன்னத இமயமலை போல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி இன்புற்றார் என்று மற்றோர் இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?”

என்று கவிஞர் பாரதிதாசன் ஏங்கிய காலம் நிறைவேறி இன்று தமிழ்நாடு உயர்கல்வி, மருத்துவத் துறை, தொழில்துறை, இந்தியப் பொருளாதாரம், வேளாண்மை, விளையாட்டுத் துறையில் இளைஞர் தம் ஆற்றல் நிறைந்துள்ளதில் முன்னணி மாநிலம் என எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு எத்திசையிலும் தமிழகம் அதன் புகழைப் பதித்துத் திகழ்கின்றது. தமிழகத்தின் ஏடும், நாடும் இதர மாநிலங்களும் இதற்குச் சான்று பதிக்கின்றன.

இந்நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற மே 2021-ஆம் ஆண்டில் ஆட்டிப்படைத்த கரோனாவை முறியடித்து, காலமல்லாக் காலத்தே புயலும், மழையும், வீசி கடும் சேதங்களை விளைவித்த நிலையிலும், மக்களின் துயர் நீக்கி, நமது மாநிலத்திற்கு இயல்பாக வரவேண்டிய நிதிகளும், உதவிகளும், ஒத்துழைப்பும் கிடைக்காமல் தடைகள் பல தொடர்கின்ற நிலையிலும் முறையான சிதையாத கட்டுப்பாடான நிர்வாக நடைமுறைகளால் தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்து, தொடர்ந்து முன்னேற்றத் திசையினில் தமிழ்நாட்டினை செலுத்திடும் நோக்கில் இந்த திராவிட மாடல் அரசு "எல்லோர்க்கும் எல்லாம்" என்ற இலக்கினை எளிதில் எய்திடும் வண்ணம் இன்று நான்காம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை "தடைகளைத் தாண்டி" எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதைக் குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

"யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே"

எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம்" என்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்!

ABOUT THE AUTHOR

...view details