சென்னை: சிறுசேரி அடுத்த தாழம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலராக பணியாற்றுபவர் வினோத் குமார். இவர் கடந்த 2ஆம் தேதி, தான் பணிபுரியும் கல்லூரிக்கு சொந்தமான 1.50 கோடி ரூபாய் பணத்தை கல்லூரி உரிமையாளர் வீட்டில் கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது அவரை மூன்று இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகே வினோத்குமாரை வழிமறைத்து, கத்தி முனையில் மிரட்டி, அவரிடம் இருந்த 1.50 கோடி ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து வினோத் குமார் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைபற்றி மயிலாப்பூர் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக வழிப்பறியில் ஈடுபட்டது பழைய கும்பலாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, வினோத்குமார் பணம் கொண்டு செல்லும் தகவலை வழிப்பறி கும்பலுக்கு தெரிவித்தவர் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தகவல் அளித்தது சுனில் குமார் என்பவர் தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மீண்டும் பணம் கொண்டு செல்லப்படுவதாக பொய்யான தகவலை சுனில் குமாருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து காவல்துறை கொடுத்த பொய்யான தகவலை நம்பி சுனில் குமார் அரக்கோணம் புறப்பட்டுச் சென்று உள்ளார். அங்கு மறைந்திருந்த போலீசார் சுனில் குமார் மற்றும் வழிப்பறி கும்பலின் தலைவன் திலீப் என்பவரையும் சுற்றி வளைத்து கைது செய்து, அவர்களிடன் விசாரணை மேற்கொண்டனர்.