தமிழ்நாடு

tamil nadu

'Myv3Ads' பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.. கோவையில் தொடரும் சர்ச்சை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 5:24 PM IST

My V3 Ads : மைவி3 நிறுவனம் வேறு பெயரில் கோடிக்கணக்கில் மோசடியில் செய்ததாக பத்துக்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Complaint against Myv3ads company
Myv3ads நிறுவனம் மீது புகார்

புகார் அளித்தவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு

கோயம்புத்தூர்:கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் (Myv3Ads) மைவி3ஏட்ஸ் நிறுவனம், செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை தினசரி வருமானம் பெறலாம் என இணையதளங்களில் விளம்பரம் செய்துள்ளது.

மேலும் இந்த நிறுவனத்தில் செலுத்தும் பணத்திக்கேற்ப ஆயுர்வேதிக் மருந்துகள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களைச் சேர்க்கும் நபர்களுக்குத் தனியாக கூடுதல் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதனை நம்பி பல லட்சம் பேர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அண்மையில் மருத்துவர்கள் பரிந்துரையின்றி மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும், தினசரி விளம்பரங்கள் பார்ப்பதன் மூலம் அதிக வருமானம் பார்க்கலாம் என்றும் ஆசைகாட்டி பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும் மைவி3 நிறுவனம் மீது, கோவை மாநகர காவல்துறையில் பாமகவை சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 29-ஆம் தேதியன்று அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவும், திட்டமிட்டு பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீலாம்பூர் பகுதியில் ஒன்று திரண்டனர். இந்த நிலையில் மைவி3 நிறுவனம், 'வி3 ஆன்லைன் டிவி' என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் இன்று(பிப்.5) அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான ஸ்டாலின் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 'வி3 ஆன்லைன் டிவி' என்ற நிறுவனத்தை விஜயராகவன், குமாரி, சிவசங்கர் ஆகியோர் இணைந்து துவங்கினர். கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வந்தது.

முதலில் இந்த நிறுவனம் தொடங்கிய போது 600 ரூபாய் செலுத்தி ஒரு தயாரிப்பை வாங்கிய பின்னர், விளம்பரம் பார்த்தால் வருமானம் வரும் என கூறினர். இதனை தொடர்ந்து 18 ஆயிரம் ரூபாய் செலுத்தி 6 நபர்களைச் சேர்த்து இந்த நிறுவனத்தில் இணைத்து விட்டால் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் எனத் தெரிவித்தனர்.

இல்லையெனில் 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலுத்தி உறுப்பினரானால் மாதம்தோறும் வருமானம் கிடைக்கும் எனக் கூறினர். இதனை நம்பி பல்லாயிரக்கணக்கான நபர்கள் இதில் முதலீடு செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகள் முறையாகப் பணம் அளித்து வந்த அந்த நிறுவனம், திடீரென ஒரே நாளில் மூடப்பட்டது.

இந்த மூடப்பட்ட நிறுவனத்தின் மார்கெட்டிங் இயக்குநராக இருந்த சக்தி ஆனந்த் என்பவரை வைத்து தற்போது மைவி3 ஏட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் துவங்கி வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். சக்தி ஆனந்த் ஒரு பினாமிதான், சிவசங்கர் என்பவர்தான் இந்த நிறுவனத்தின் முக்கிய நபர் அவரின் பெயரில்தான் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தையும் விரைவில் மூடும் திட்டம் அவர்களுக்கு உள்ளது. இவர்கள் மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஆரம்பம்தான் கூடிட விரைவில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான நபர்கள் 'Myv3Ads' நிறுவனத்தின் மீது புகார் அளிக்க தாயாராக உள்ளனர்" இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க:அரசியலில் விருப்பம் இல்லை; கடைசி வரை சேவை செய்யவே விருப்பம்: கேபிஒய் பாலா கருத்து

ABOUT THE AUTHOR

...view details