தமிழ்நாடு

tamil nadu

தமிழக மீனவர்களை படகுகளுடன் விடுவிக்க வலியுறுத்தல்.. வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! - MK Stalin letter to Jaishankar

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 7:18 PM IST

MK Stalin letter to Jaishankar
MK Stalin letter to Jaishankar

MK Stalin letter to Jaishankar: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை:தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, கடந்த மார்ச் 21ஆம் தேதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிப்பதாகவும், கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 21ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும், அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே, இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை கேட்டுக் கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், இலங்கைச் சிறைகளில் வாடும் மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை உறுதி செய்திடவும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:விளவங்கோடு இடைத்தேர்தல்; பாஜக வேட்பாளராக வி.எஸ்.நந்தினி போட்டி! - BJP Candidate V S Nanthini

ABOUT THE AUTHOR

...view details