தமிழ்நாடு

tamil nadu

“கூட்டணி தர்மத்திற்கு எதிரானது”.. மயிலாடுதுறை திமுக பிரமுகர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 3:29 PM IST

மயிலாடுதுறை திமுக காங்கிரஸ் கூட்டணி
மயிலாடுதுறை திமுக காங்கிரஸ் கூட்டணி

Mayiladuthurai Congress - DMK issue: மயிலாடுதுறை திமுக நகரச் செயலாளரும், நகர்மன்றத் தலைவருமான செல்வராஜின் பேச்சு, கூட்டணி தர்மத்திற்கு எதிராகவும், கூட்டணியை சீர்குலைப்பதாகவும் உள்ளது என காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கனிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:தருமபுரம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு அடுக்கு மாடியில் நூலகம் கட்ட திட்டமிடப்பட்டு, அதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர், அங்கு வந்த திமுக நகரச் செயலாளரும், நகர்மன்றத் தலைவருமான குண்டாமணி என்கிற செல்வராஜ், நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் அடிக்கல் நாட்டியதைக் கண்டித்து, கட்டட ஒப்பந்தக்காரர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், எம்.எல்.ஏ ராஜ்குமாரை, “நீ காங்கிரஸ் ஓட்டுலயா ஜெயிச்ச? திமுக ஓட்ட வாங்கி தானே ஜெயிச்ச” என பேசினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, இந்த சம்பவத்தைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சீர்காழியில் இன்று காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான கனிவண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “காங்கிரஸ் மாவட்டத் தலைவரும், மூத்த சட்டமன்ற உறுப்பினருமான மயிலாடுதுறை ராஜ்குமாரை, மயிலாடுதுறை திமுக நகரச் செயலாளர் செல்வராஜ் ஒருமையில் தரக்குறைவாக பேசியதை வன்மையாக, வருத்தத்துடன் கண்டிக்கிறோம். இது கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், கூட்டணி கட்சியினரிடமும் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளவர் ராஜகுமார். 4 முறை போட்டியிட்டு, இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இப்பகுதியில் இருக்கக்கூடிய பூம்புகார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்களுடன் நல்ல நல்லுறவையும், நட்பையும் போற்றி பணி செய்து வருகிறோம்.

குறிப்பாக, மோடியின் ஆட்சியினை வீழ்த்துவதற்காக இந்தியா கூட்டணி துடிப்பாக, குறிப்பாக தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் ஒருமனதாக பணியாற்றி வரும்போது, பொறுப்பான பதவியில் இருக்கக்கூடிய செல்வராஜ், மூத்த காங்கிரஸ் பிரமுகர் - சட்டமன்ற உறுப்பினர் பற்றி ஒருமையில் தரக்குறைவாக பொதுவெளியில் பேசி இருப்பது, ஒரு பொறுப்பற்ற செயலாக கருதுகிறோம்.

இது குறித்து காங்கிரஸ் தலைமையில் புகார் அளித்து, கூட்டணி தலைவர் ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். நகர மன்றத் தலைவர் செல்வராஜ் பேச்சு, கூட்டணி தர்மத்துக்கு எதிராகவும், அதனை சீர்குலைப்பதாகவும் அமைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடிய நேரத்தில் ஜனநாயகப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற வேளையில், இது பெரிய இடியாக இறங்கியுள்ளது” என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:5 ஆண்டுகளாக சட்டவிரோத கருக்கலைப்பு செய்து வந்த செவிலியர் மதுரையில் கைது!

ABOUT THE AUTHOR

...view details