தமிழ்நாடு

tamil nadu

கனரா வங்கியில் கடன் வழங்கியதில் மோசடி என புகார்; வங்கி மண்டல மேலாளர் பதிலளிக்க உத்தரவு! - Canara Bank Loan Fraud Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 3:46 PM IST

CANARA BANK LOAN FRAUD CASE: திருச்சி, துவாக்குடி கனரா வங்கியில் கடன் வழங்கியதில் பல கோடி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், கனரா வங்கியின் மண்டல மேலாளரைத் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராகச் சேர்த்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai-high-court-orders-bank-zonal-manager-to-respond-to-canara-bank-fraud-case
கனரா வங்கியில் முறைகேடு மோசடி வழக்கு, வங்கி மண்டல மேலாளர் பதிலளிக்க மதுரை ஐக்கோர்ட் உத்தரவு...

மதுரை: திருச்சியைச் சேர்ந்த தனபாலன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2015ஆம் ஆண்டில் கலா என்பவர் தொழில் தொடங்குவதாகக் கூறி, திருச்சி துவாக்குடியில் உள்ள கனரா வங்கிக் கிளையை அணுகினார். அதன் அடிப்படையில், அவருக்கு ரூபாய் 2 கோடி லோன் வழங்கப்பட்டது. கடன் தொடர்பான விவரங்கள் எதையும் என்னிடம் தெரிவிக்காமல், என்னை சாட்சியாகக் கையெழுத்திட அவரும், வங்கி ஊழியர்களும் கூறினர். அதன் அடிப்படையில், நானும் கையெழுத்திட்டேன்.

பின்னர் இது தொடர்பான விவரங்களை விசாரித்தபோது, இன்ஜினியரிங் கம்பெனியின் நிறுவனராக தன்னை காண்பித்து வங்கிக் கடன் பெற்றது தெரிய வந்தது. ஆனால், அந்நிறுவனம் அவருடையதல்ல. அவர் போலியான சான்றிதழ்களைச் சமர்ப்பித்து வங்கியில் கடன் பெற்று, துவாக்குடி பகுதியில் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலமும் இதுவரை முறையாக பத்திரப்பதிவு செய்யப்படவில்லை.

இதேபோல், கடந்த 2014-ல் பாரி என்பவர் கனரா வங்கியில் 11 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதற்குச சாட்சியாக தற்போது கடன் வாங்கிய கலா என்பவர் கையெழுத்திட்டுள்ளார். இவர் பாரியின் மனைவி ஆவர். மேலும், வங்கிக் கடன் பெற்ற விவகாரம் இவரது சிபில் மதிப்பில் ஏறவில்லை. ஆனால், சாட்சி கையெழுத்து போட்ட எனது பெயரில் உள்ள பான் கார்டு மற்றும் சிபில் பதிவில் இரண்டு கோடி கடன் வாங்கியது தெரிகிறது. இதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று உள்ளது.

மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயம் விசாரணைக்கு வந்த போது, கனரா வங்கி தரப்பில் மோசடி ஏதும் நடைபெறவில்லை என மோசடி செய்தவர்களுக்குச் சாதகமாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது என தெரிய வருகிறது. ஆகவே, எனது புகார் தொடர்பாக சிபிஐ விசாரித்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வங்கியில் பல கோடி கடன் வழங்கியதில் முறைகேடு புகார் குறித்து வங்கியின் மண்டல மேலாளர் பதிலளிக்க வேண்டும் என்பதால், அவரை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக தாமாக முன்வந்து சேர்த்து, இந்த வழக்கு குறித்து விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:"ஓட்டு போடுவதற்காவது வண்டி அனுப்புங்க".. தேர்தல் பிரச்சாரத்தையே அறியாத திருநெல்வேலி காணி பழங்குடியினர்! - LOK SABHA ELECTION 2024

ABOUT THE AUTHOR

...view details