தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 7:28 PM IST

Etv Bharat
Etv Bharat

Thoothukudi incident: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வசூலிக்காதது ஏன் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க அனுமதித்து, பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் இன்று (மார்ச் 20) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், அறிக்கை தாக்கல் செய்ய தொடர்ந்து காவல்துறை தரப்பில் நேரம் கேட்கப்பட்டு வருவதாகவும் மனுதாரர் ஹென்றி திபேன் குற்றம் சாட்டினார். மேலும், சிபிஐ இதுவரை ஒரு காவல் ஆய்வாளர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் தான் இழப்பீடு வழங்கப்பட்டதா என்று தமிழக அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர். மேலும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டிய அதிகாரிகளிடம் இருந்து அந்த இழப்பீட்டுத் தொகையை ஏன் வசூலிக்கவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் அப்பாவி பொதுமக்கள் தான் என்றும், இதுபோன்ற சம்பவம் எதிர்காலங்களில் நடைபெறக்கூடாது என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்வதாகவும் தெரிவித்த நீதிபதிகள், வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை மார்ச் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரம்; மத்திய இணையமைச்சர் மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details