ETV Bharat / state

உறவினர் பாலியல் தொல்லை அளித்ததாக கரூர் எஸ்பி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு! - woman protest at Karur SP office

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 10:06 PM IST

Karur: உறவினர் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காததாக காவல் நிலையத்தைக் கண்டித்து, கரூர் எஸ்பி அலுவலகத்தில் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் எஸ்பி அலுவலகம் மற்றும் கோப்புப்படம்
கரூர் எஸ்பி அலுவலகம் மற்றும் கோப்புப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

கரூர் எஸ்பி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண் காட்சி (credits - ETV Bharat Tamil Nadu)

கரூர்: கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த 41 வயது பெண் ஏம்.ஏ, எம்பில் படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தாய், தந்தை இருவரும் இறந்துவிட்ட நிலையில், 3 மாடுகளை வைத்துக் கொண்டு அதில் வரும் வருவாயை வைத்து உறவினரது ஒரு குழந்தையை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், தனியாக வசித்து வரும் இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான அண்ணாவி (70) என்பவர், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அண்ணாவி என்பவர் இவருக்கு ரூ.3 லட்சம் சீட்டு பணம் தராமல் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

புகார் அளித்ததன் அடிப்படையில், வெள்ளியணை போலீசார் கடந்த ஒரு வார காலமாக விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அண்ணாவி என்பவரை கைது செய்வதாக அழைத்து வந்து காவல் நிலையத்தில் அமர வைத்துவிட்டு, வெள்ளியணை போலீசார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) காலை மீண்டும் அந்தப் பெண்ணை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். இதனால் மன உளைச்சலடைந்ததாக, அப்பெண் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “தனக்கு ஆதரவாக யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டு, தனக்கு பல்வேறு வகையில் இரவு நேரங்களில் பாலியல் ரீதியாக அண்ணாவி என்பவர் தொந்தரவு அளித்து வருகிறார். ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு நான் தனியாக வாழ்ந்து வருகிறேன். தனக்கு பணம் தருகிறேன் என்று மிரட்டி வருகிறார்.

மேலும், எனது பணத்தை தராமல் ஏமாற்றியதற்கும், படித்த என்னை அசிங்கப்படுத்தியதற்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை என்னால் முடிந்தவற்றை நான் செய்வேன். புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால், இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு நீதி, நியாயம் கிடைக்க வேண்டும். இல்லையென்றால், இதே இடத்தில் தற்கொலை செய்து கொள்வேன்” என்று கரூர் எஸ்பி அலுவலகத்தில் கண்ணீர் மல்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் பொன்ராஜ், போராட்டத்தில் ஈடுபட்ட பென்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் வெள்ளியணை காவல்துறை வழக்கு பதிந்து, அண்ணாவியை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, சுமார் 45 நிமிட தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக விளக்கிக் கொண்டார்.

இதையும் படிங்க: 'இனி யார் மனதையும் புண்படுத்தமாட்டேன்' - நீதிபதியிடம் உறுதியளித்த சவுக்கு சங்கர்? - Savukku Shankar

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.