தமிழ்நாடு

tamil nadu

"போலீஸ் பாதுகாப்பு கேட்பது பேஷனாகி விட்டது" சூர்யா சிவாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 8:03 AM IST

Trichy Surya Siva: பாஜக ஓ.பி.சி.அணி மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

high court madurai bench dismissed trichy surya siva petition
உயர் நீதிமன்ற மதுரை கிளை

மதுரை:நேரடியாகவும், செல்போன் மூலமாகவும் தனக்கு மிரட்டல் அதிகரித்து வருவதால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி பா.ஜ.க பிரமுகர் சூர்யா சிவா தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்த நீதிபதி, 2 போலீஸ் பாதுகாப்பு வைத்திருப்பது தற்போது பேஷனாக மாறிவிட்டது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜகவில் ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளரான திருச்சி சூர்யா சிவா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். நான் பாரதிய ஜனதா கட்சியில் ஓ.பி.சி. மாநில பொதுச்செயலாளராக உள்ளேன். பொதுமக்கள் சேவைக்காகவும், கட்சி பணிக்காகவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இந்த சூழ்நிலையில் தற்போது சிலர் என்னை பின்தொடர்ந்து, தனக்கு நேரடியாகவும், செல்போன் மூலமாகவும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக என்னுடைய கார் மீது பேருந்தை மோதச் செய்து என்னை கொல்ல முயன்றனர். அவர்களுடைய நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனவே, தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தண்டபாணி முன்பாக நேற்று (பிப்.15) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், வழக்கறிஞர் நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரர் திருச்சி சூர்யா சிவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதனைத்தொடர்ந்து பேசிய நீதிபதி தண்டபாணி, "மனுதாரர் சூர்யா சிவா யார் என்பது நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும். மனுதாரருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியும். இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது" என்று கூறினார். இதனையடுத்து சூர்யா சிவா தரப்பு வழக்கறிஞர் போலீஸ் பாதுகாப்பு கேட்ட மனுவைத் திரும்ப பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சூர்யா சிவாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:விசிக பொதுச் செயலாளராக தேர்தல் ஆலோசகர் ஆதவ் அர்ஜூனா நியமனம்! பொதுத் தொகுதியில் போட்டியா? பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details