தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் பறக்கத் தயாரான பெலிக்கன் பறவைகள்; எண்ணெய் கசிவு பாதிப்பிலிருந்து மீண்டு விட்டதாகத் தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 3:39 PM IST

forest department has said ennore oil spill affected pelican birds are fine
எண்ணூர் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட பறவைகள்

Ennore oil spill: எண்ணூர் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட பறவைகள் தற்போது நலமுடன் உள்ளதாகவும், அவை விரைவில் பறக்க விடத் தயாராக உள்ளதாகவும், பறவைகளின் நலன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: எண்ணூர் பகுதியில் கடந்த டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலின் எதிரொலியால் அதி கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் அப்பகுதியில் இயங்கி வந்த மத்திய அரசின் சி.பி.சி.எல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய எண்ணெய் கழிவுகள் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் பரவியது.

இந்த எண்ணெய் கழிவுகள் கொசஸ்தலை ஆறும், வங்கக்கடலும் சங்கமிக்கும் இடமான எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் பரவி, மீனவர் குடியிருப்பு பகுதிகளான நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் படர்ந்து கடலில் சேர்ந்தது. இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் கழிவுகள் படிந்து அவை பாழாயின.

மேலும், ஏராளமான மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் இறந்து தண்ணீரில் மிதந்தன. இந்த பாதிப்பு இதோடு மட்டும் நில்லாமல், அலையாத்தி காடுகள், மற்றும் வெளிநாட்டில் இருந்து வலசைக்கு வந்த பறவைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வனத்துறை ஆய்வு செய்தது.

இதனிடையே எண்ணெய் கசிவுகளால் பாதிக்கப்பட்ட பறவைகள் முகத்துவாரப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்துவிட்டன. குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட பறவைகளின் சிறகுகள் மீது எண்ணெய் படலம் படர்ந்து பறக்க முடியாமல் அவதிப்பட்டன. எண்ணூர் முகத்துவாரத்துக்கு வரும் பறவைகள் அனைத்தும் இரை தேடி வருகின்றவை ஆகும். இவையெல்லாம், வேட்டையாடி உண்ணக் கூடியவை என்பதால் அதற்கு வேகம் அவசியம்.

பறவைகளின் சிறகுகளில் எண்ணெய் படியும் போது, அதன் எடை அதிகமாகி அவற்றால் வழக்கமான வேகத்தில் பறக்க முடியாது. இரைக்காக வேட்டையாடவும் முடியாது. நீரில் நீந்திச் செல்லவும் சிரமப்படும் என பறவைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் எண்ணெய் கழிவால் உடல் முழுவதும் பாதிக்கப்பட்ட 10 கூழைக்கடா (பெலிக்கன்) பறவைகள் மீட்கப்பட்டு, சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் அதை அகற்றும் பணியானது டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெற்றது.

இதனை அடுத்து, பல தன்னார்வலர்கள் அமைப்பும் வனத்துறையும் இணைந்து, முதற்கட்டமாக எண்ணூரில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து பெலிக்கான் (கூழைக்கடா) பறவைகளின் மீது படிந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து, கால்நடை மருத்துவர் அஸர்ஃப் கூறுகையில், “பறவைகளின் இறக்கைகளில் இருந்த எண்ணெய் படலம் பிரஷ் மூலம் அகற்றப்பட்ட நிலையில், பறவைகள் பறப்பதற்குத் தயாராக உள்ளன.

மேலும், தற்போது பாதிக்கப்பட்ட பறவைகள் நீந்துகிறதா? நீந்தும் போது ஏதாவது பிரச்சினை ஏற்படுகிறதா? என்று நாங்கள் சோதித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார். இது குறித்து சென்னை மாவட்ட வன உயிர் பாதுகாவலர் பிரசாந்த் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பறவைகள் தற்போது நலமுடன் உள்ளன. அவை விரைவில் பறக்க விடத் தயாராக உள்ளன.

அதன் இயல்பான செயல்களை அது செய்து வருகிறது. மேலும், தொடர்ந்து பறவைகளின் நலத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதைத் தொடர்ந்து, சென்னையில் நீர்நிலை பறவைகளைப் பறக்க விடத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சேலத்தில் 46 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details