ETV Bharat / state

சேலத்தில் 46 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 9:11 AM IST

Birds Counting
சேலத்தில் 46 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு

Salem Birds Counting: சேலம் மாவட்ட வனத்துறை சார்பில், ஈர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பை வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சுமார் 46 இடங்களில் நடத்தினர்.

சேலம்: தமிழ்நாட்டில் வருடந்தோறும் வனத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முடிந்தபின் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதில், ஈர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள் மற்றும் இதர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் என 2 வகையான கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள வனக்கோட்டங்களில் நேற்று (ஜன.28) ஈர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள் குறித்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சேலம் மாவட்ட வனத்துறையில், சேலம் வனக்கோட்டம், ஆத்தூர் வனக்கோட்டத்தில் இந்த ஈர நிலப்பகுதி பறவைகள் கணக்கெடுப்பு நேற்று காலை 6 மணிக்குத் தொடங்கியது. இப்பணியை வனச்சரகர்கள் தலைமையில் வன ஊழியர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தினர்.

சேலம் வனக்கோட்டத்தில் சேர்வராயன் தெற்கு, சேர்வராயன் வடக்கு, டேனிஷ்பேட்டை, ஏற்காடு, மேட்டூர், வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் சேர்வராயன் மலை, ஜருகுமலை, சூரியமலை, கோதுமலை, பாலமலை, நகரமலை, கஞ்சமலை அடிவார பகுதிகள், அங்குள்ள குட்டைகள், ஏரிகள் போன்றவற்றில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சேலம் மூக்கனேரி பகுதியில் மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி தலைமையில், வனத்துறையினர் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினர். ஏரிப்பகுதியில் இருந்த ஒவ்வொரு பறவைகளையும் பைனாகுலர் மூலம் பார்த்து, அதன் விவரத்தை பதிவு செய்து, குறிப்பெடுத்துக் கொண்டனர். மொத்தமாக சேலம் வனக்கோட்டத்தில் 100 பேர் 21 இடங்களில் இக்கணக்கெடுப்பை நடத்தினர்.

அதேபோல உதவி வனப்பாதுகாவலர் செல்வக்குமார் தலைமையில், டேனிஷ்பேட்டை சரகத்தில் காஞ்சேரி காப்புக்காட்டில் உள்ள ஓங்குராஜா ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் சேலம் கோட்டத்தில் 21 இடங்களிலும், ஆத்தூர் வனக்கோட்டத்தில் 25 இடங்களிலும் என மொத்தம் 46 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இக்கணக்கெடுப்பு பற்றி மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் ஈர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்து வந்துள்ள பறவைகளை கண்டு தனியாகப் பதிவு செய்கிறோம். இங்குள்ள பல வகை பறவைகளில் புதிய சில பறவைகளைப் பார்க்கிறோம்.

எத்தனை வகையான பறவைகளை கண்டறிந்தோம் என்பதை பதிவிட்டு வனத்துறையின் தலைமையிடத்திற்கு அனுப்பி வைப்போம். சேலம் வனப்பகுதியில் காணப்பட்ட புதிய வகை பறவைகள் குறித்த தகவலை வெளியிடுவோம். கடந்தாண்டு சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில் 140 வகை பறவைகள் கண்டறியப்பட்டன. இந்த ஆண்டிலும் சில புதிய வகை பறவைகளை காண்போம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மதவெறி மாய்ப்போம், மனித நேயம் காப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.