நீலகிரி:நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பாரஸ்ட் டேல் பகுதி அடர்ந்த வனங்கள் நிறைந்த பகுதியாகும். இந்த வனப்பகுதியை ஒட்டி ஏராளமான தேயிலைத் தோட்டங்களும், குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளன. இந்த வனப்பகுதியில் அவ்வப்போது தீ விபத்து நேர்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது நீலகிரி மாவட்டம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வரும் சூழல் உள்ளது. இதன் காரணமாக, குன்னூரில் உள்ள பல இடங்களிலும் காய்ந்து கருகி உள்ள மரங்கள் அவ்வப்போது தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், நேற்றைய முன்தினம் (மார்ச் 12) இரவு பாரஸ்ட் டேல் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த பகுதியில், சாம்பிராணி மரங்கள் மற்றும் கற்பூர மரங்கள் போன்றவை அதிகம் உள்ளதால் தீ எளிதில் பரவி, ஏராளமான மரங்கள் மற்றும் செடிகள் கொழுந்து விட்டு எரிந்தன. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
இதனை அடுத்து, நீண்ட நேரம் போராடியும் தீயணைப்புத் துறையினரால் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல், நேற்று (மார்ச் 13) இன்று (மார்ச் 14) என இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியாகப் போராடி காட்டுத்தீயை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கு இடையில், வனத்துறையினர் இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில் இந்த காட்டு தீ விபத்து தானாக ஏற்பட்டது அல்ல என்பது தெரியவந்தது.