தமிழ்நாடு

tamil nadu

கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவதில் விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 3:08 PM IST

Village panchayat meeting: கிராம சபைக் கூட்டங்கள் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் எனவும், அவற்றை நடத்துவதில் விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி மேற்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கிராம சபை கூட்டங்கள் நடத்துவதில் விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாம்

சென்னை: தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் சட்டத்திற்குட்பட்டு நடத்தப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி மௌரியாவிற்கு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பஞ்சாயத்து சட்டப்படியும், கிராமசபைக் கூட்ட விதிகளின் படியும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி பிறந்த தினம்) என நான்கு முறை, கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை ஒட்டி, கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவதற்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர், செப்டம்பர் 26ம் தேதி வெளியிட்டிருந்த நிலையில், கரோனா தொற்றைக் காரணம் காட்டி, அந்த கூட்டங்களை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதை எதிர்த்து, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மௌரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஜன.24) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மக்கள் நீதி மய்யம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் கிராமங்களின் நிர்வாகம், வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கக் கூட்டப்படும் கிராமசபைக் கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், எந்த முக்கிய காரணமும் இல்லாமல் கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்தது சட்டவிரோதமானது எனவும் வாதிட்டார்.

இந்நிலையில் அரசு தரப்பில், ஆஜரான அரசு வழக்கறிஞர் P.முத்துக்குமார் கரோனா ஊரடங்கு தளர்வுகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படாத நிலையிலேயே 2020ஆம் ஆண்டு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும், அதற்கு அடுத்த ஆண்டுகளில் கிராம சபைக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த விவாதங்களைக் கேட்ட நீதிபதிகள், கிராம சபைக் கூட்டங்கள் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் எனவும், அவற்றை நடத்துவதில் விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மனுதாரர் மேற்கொள்ளலாம் என்றும் கூறி உத்தரவு பிறப்பித்து, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: தனியார் மயத்தை நோக்கி செல்லும் தமிழ்நாடு அரசு; திமுக மீது அரசு ஊழியர்கள் அதிருப்தி? - வெங்கடேசன் பிரேத்யேக பேட்டி

ABOUT THE AUTHOR

...view details