தஞ்சாவூர்: கும்பகோணம் பாலக்கரை பகுதியைச் சேர்ந்த சுபாஷ், கடந்த சில ஆண்டுகளாக துபாய் நாட்டில் பணியாற்றி வந்தார். அங்குள்ள நபர்கள், சுபாஷிடம் இந்திய மதிப்பில் சுமார் 54 லட்சம் மதிப்பிலான 900 கிராம் தங்கத்தை, நாகப்பட்டினத்தில் உள்ள ரஹினா பேகம் என்பவரிடம் ஒப்படைக்கக் கொடுத்து அனுப்பியுள்ளனர். ஆனால் கடந்த 22ஆம் தேதி இந்தியா வந்த சுபாஷ் கும்பகோணம் செல்லாமல் கொச்சின் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் சுபாஷ் சொந்த ஊர் திரும்பவில்லை என்றும், துபாயிலிருந்து கொடுத்து அனுப்பிய 900 கிராம் தங்கத்தை நாகையில் உள்ள ரஹீனா பேகத்திடமும் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் நகை யாருக்குச் சேர வேண்டுமோ அந்த நபர்கள் கும்பகோணத்தில் உள்ள ரவுடிகள் சிலர் துணையுடன் கடந்த 6ஆம் தேதி கும்பகோணம் பாலகரைப் பகுதியில் உள்ள சுபாஷின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் சுபாஷ் இன்னும் வீட்டிற்கு வந்து சேரவில்லை எனக் கூறியதையடுத்து ஆத்திரமுற்ற அந்த கும்பல், அங்கிருந்த சுபாஷின் சகோதரர் சுரேஷை அரிவாள் முனையில் காரில் கடத்திச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் கடத்தப்பட்ட சுரேஷின் அலைபேசி எண்ணின் உதவியோடு அவர் திருச்சி, சிங்காரத்தோப்பில் உள்ளார் எனத் தெரியவந்தது.
அங்க சென்ற போலீசார் சுரேஷை மீட்டு, அவரை கடத்தப் பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்து, கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்பட்ட 8 பேரைக் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 2 கத்தி, 2 அரிவாள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முக்கிய நபரான ரஹினா பேகத்தை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.