“இன்றைய மாணவர்கள் மதிப்பெண்களுக்காக மட்டும் படிக்கிறார்கள்” இறையன்பு ஐஏஎஸ்!
Published : Dec 20, 2023, 9:19 AM IST
கடலூர்: 'சாகித்ய அகாடமி'யின் சிறார் இலக்கிய விருதாளர், ஆயிஷா நடராஜன் எழுதிய 150 ஆவது நூல் வெளியிட்டு விழா நேற்று (டிச.19) கடலூரில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஐஏஎஸ் கலந்து கொண்டார்.
ஆயிஷா நடராஜன் நூல் வெளியீட்டு விழா: எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் எழுதிய ‘பண்ணைப் புத்தகம்’, சிறார் நூலான ‘கழுதை வண்டி’, ‘நூலகலாஜி’ ஆகிய தமிழ் நூல்கள் உள்பட இரு ஆங்கில நூல்கள் என மொத்தம் ஐந்து நூல்களை சிறப்பு விருந்தினரான தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்றைய காலக் கட்டத்தில் வாசிப்பு நிகழ்வு என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மின்னணு சாதனங்களில் படிப்பதால் கவனம் சிதறுகிறது. எனவே, மாணவர்கள் மின்னணு சாதனங்களின் உபயோகங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கல்லுாரி மாணவர்கள், அரசியல் சித்தாந்தம் பற்றி படித்தார்கள். ஆனால், தற்போது உள்ள மாணவர்கள் மதிப்பெண்களுக்காக படிக்கின்றனர். மதிப்பெண்களுக்காக படிப்பது வாழ்க்கைக்கு உதவாது. எனவே, புத்தகங்களை வாசிப்பு சிறந்தது” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பூபதி பெரியசாமி, விக்யான் பிரசார் அறிவியல் பலகை சுட்டி கணேசன், இந்திய மருத்துவ கழக கடலுார் தலைவர் கண்ணன், டாக்டர் இளந்திரையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.