Courtallam Falls: குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் ஆகிய இடங்கள் தண்ணீர் இன்றி காணப்பட்டது. இதனிடையே அவ்வப்போது சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து வரத் தொடங்கியது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை, அதிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிகளில் குளிப்பதற்கு காவல் துறையினர் தடை விதித்தனர்.
ஆனால், தற்போது குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சீரான நிலையில் வருவதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் செல்லாமல், குளித்து விட்டு செல்கின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.