Dindigul State Teacher Award: திண்டுக்கல் பள்ளி மாணவிகளின் அசரவைத்த அன்பு.. நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு ஜீப்பில் ஊர்வல மரியாதை..
Published : Sep 8, 2023, 1:34 PM IST
திண்டுக்கல்: வத்தலக்குண்டில் அரசு உதவி பெறும் மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் எலிசபெத் பாத்திமா என்பவர், இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
மேலும், தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் நல்லாசிரியர் விருதைப் பெற்ற இவர், பள்ளி திரும்பிய நிலையில் அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதில், பேருந்து நிலையம் முதல் பள்ளி வரை இருபுறமும் அணிவகுத்து நின்ற மாணவிகள், விருது பெற்ற தலைமை ஆசிரியரை திறந்த வெளி ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஊர்வலத்தில் பொதுமக்களும் பங்கேற்று, தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும் வழிநெடுகிலும் மாணவிகள், விருது பெற்ற ஆசிரியருக்கு பூங்கொத்து மற்றும் பரிசுகளை வழங்கி உற்சாகப் படுத்தினர்.
இத்தகைய தமிழக அரசின் உயரிய விருதான நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை, பள்ளி மாணவிகள் ஊர்வலமாக அழைத்து வந்து உற்சாகப்படுத்திய நிகழ்வு அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மேலும், இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகக் குழுவினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.