மணிப்பூர் கலவரம்; தமிழ்நாட்டில் தொடரும் பதற்றம்.. மெரினாவில் போலீசார் குவிப்பு!
சென்னை: மணிப்பூரில் நிகழ்ந்து வரும் கலவரம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கலவரத்தின் போது இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் சீண்டலுக்கு ஆளான வீடியோ வெளியாக உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியால் மெரினாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூட இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசியமாகத் தகவல் வந்தது. மேலும், உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை போலீஸ் பாதுகாப்பு போட உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி போராட்டக்காரர்கள் மெரினா வராத வண்ணம் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 4 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 40 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையங்களில், ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பும், ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.