ஹோட்டலில் மாமூல் தர மறுத்த இருவருக்கு அடி உதை - ரவுடி கைது!
சென்னை அமைந்தகரை மேத்தா நகர் ரயில்வே காலனி பகுதியில் வேலுசாமி மிலிட்டரி ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. கடந்த 30ஆம் தேதி மாலை ஹோட்டலில் இருவர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர் உணவு அருந்தி வந்த இருவரிடம் மாமூல் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார்.
அந்த நபர்கள் மாமூல் தர மறுத்ததால் இருவரையும் அவர் கொடூரமாகத் தாக்கிவிட்டுச் சென்றுள்ளார். இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் ராம்குமார் கொடுத்த புகாரின் பேரில் அமைந்தகரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்த இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், தாக்கிய நபர் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி பாலாஜி என்பதும் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பாலாஜியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஹோட்டலில் ரவுடி பாலாஜி கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரவுடி பாலாஜி, கடையில் இருந்த இருவரையும் கையிலும், காலிலும் கொடூரமாகத் தாக்கியதில் ஒருவர் மயக்கம் அடைவது போன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் சம்பளம் தராததால் கேஸ் கம்பெனிக்கு தீ வைத்து தப்பியோடிய நபர் கைது!