தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மயிலாடுதுறையில் மொழி ஆய்வகம் திறப்பு

By

Published : Mar 15, 2023, 8:59 PM IST

thumbnail

மயிலாடுதுறை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கையாளும் மொழி ஆய்வகங்களை நிறுவி வருகிறது. 2023 - 2024ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சரளமாக ஆங்கில மொழியை கையாளும் திறனை மேம்படுத்துவதில், இத்திட்டம் முனைப்புடன் செயல்படுகிறது.

மாநிலம் முழுவதும் 23 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் 89,680 செயல்படும் நிலையில் உள்ள கணினிகள், மொழி ஆய்வகங்களாக செயல்படும். இந்த மொழி ஆய்வகங்களின் வாயிலாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். 

இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் முதல் முறையாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இன்று (மார்ச் 15) திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இதனையடுத்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்காக, தமிழ்நாட்டில் மொழிகள் ஆய்வகம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழி அறிவு, சாஃப்ட் ஸ்கில் ட்ரைனிங் மூலம் எளிதாக வேலைவாய்ப்பை பெற முடியும். 

மொழி ஆய்வகத்தை முறையாகப் பயன்படுத்தி செய்முறைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்படும். இந்த மொழிகள் ஆய்வகத் திட்டம் குறித்து இந்த பள்ளியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 8ஆம் வகுப்பு மாணவன், தனக்கு எளிய முறையில் விளக்கியதாக தெரிவித்தார். தமிழ்நாடு அரசு, கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. 

கடந்த 2020ஆம் ஆண்டு விடியலை நோக்கி பயணம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாங்கு சேகரித்தபோது, இதே குத்தாலம் பகுதியில் காவல் துறையினர் என்னை கைது செய்து தனியார் மண்டபத்தில் ஒரு நாள் முழுவதும் அடைத்து வைத்தனர். தற்போது அதே காவல் துறையினர் எனக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர்” என்றார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.