விஜயதசமி; சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்களுடன் பள்ளியில் சேர்ந்த குழந்தைகள்!
Published : Oct 24, 2023, 1:24 PM IST
தஞ்சாவூர்: விஜயதசமியை முன்னிட்டு செட்டிமண்டபம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. நவராத்திரி விழாவின் நிறைவாக, பத்தாம் நாளான இன்று விஜயதசமி கொண்டாடப்படும். இதனை முன்னிட்டு, அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் காலை முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கும்பகோணத்தில் பல்வேறு மழலையர் பள்ளிகளில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தி மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. கும்பகோணம் செட்டிமண்டபம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில், விஜயதசமியை ஒட்டி சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
நவதானியங்களை கோலத்தின் நடுவில் பரப்பி, அதில் புதிதாக சேர்ந்த குழந்தைகளின் கை விரல்களை பிடித்து ஓம் மற்றும் அ என்ற எழுத்துக்களை எழுத வைத்தும், குழந்தைகளின் நாவில் நெல் மணியைக் கொண்டு ஓம் மற்றும் அ எழுதியும் குழந்தைகளின் கல்வியைத் துவக்கி வைத்தனர்.
இதில் ஏராளமான குழந்தைகள், தம் பெற்றோருடன் கலந்து கொண்டு கல்வி கற்றலின் முதல் பாடத்தை இன்று தொடங்கினர்.