சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலய கிறிஸ்துமஸ் குடியிலில் பிறந்த குழந்தை இயேசு!
Published : Dec 25, 2023, 12:49 PM IST
திருவண்ணாமலை: சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கிறிஸ்மஸ் குடிலில் வைக்கப்பட்ட குழந்தை இயேசுவை ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்று வழிபட்டுச் சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ளது மிகப்பெரிய கத்தோலிக்க திருத்தலமான தூய லூர்து அன்னை தேவாலயம்.
இந்த ஆலயத்தில் இன்று கிறிஸ்துமஸ் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் உள்ள விண்ணை முட்டும் கோபுரங்கள் மற்றும் தேவாலயம் முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கிறிஸ்தவ மக்கள் அனைவரும் பிரார்த்தனைக்காக ஆலயத்தில் ஒன்று கூடினர்.
பின்னர் பங்குத்தந்தை விக்டர் இன்பராஜ், உதவி பங்கு தந்தையர்கள் சதீஷ் ராஜ், ஸ்டீபன் ஆகியோர் சிறப்பு திருப்பலியை நடத்தினர். இந்த விழாவில் இறைவன் இயேசுவின் பிறப்பு நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆலயத்தில் இயேசுவின் சொரூபம் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான கிறிஸ்மஸ் குடிலில் வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடும் குளிரிலும் பிரார்த்தனைக்காக ஆலயத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடிலில் வைக்கப்பட்ட குழந்தை இயேசுவை வணங்கி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு மக்கள் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.