100th Mann Ki Baat:3D ஒளியில் ஜொலித்த வேலூர் கோட்டை!
வேலூர்: பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் (Mann Ki Baat) என்ற மனதின் குரல் நிகழ்ச்சியையொட்டி, ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போராட்டத்திற்கு ஆரம்ப புள்ளியாக இருந்த சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் நேற்று (ஏப்.29) 3D முறையில் செய்த விழிப்புணர்வால் பிரமாண்டமாக வேலூர் கோட்டை மதில்கள் ஜொலித்தன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
பிரதமரின் மனிதன் குரல் 100-வது பகுதி நிகழ்ச்சியை வெற்றிபெறச் செய்யும் வகையில், நாடு முழுவதும் வரலாற்றுச் சிறப்புமிக்க 13 இடங்களில் 2 நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் ஒரு இடமான முதல் சுதந்திரப் போராட்டக் களமான வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் கோட்டை பகுதியில் உள்ள பூங்காவில் முதல் நாளான நேற்று மாலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதில் வேலூர் கோட்டை சுவற்றில் 3D தொழில்நுட்பத்தில் பிரமாண்டமான முறையில் ஒலி, ஒளியுடன் கூடிய பிரதமர் இதுவரை ஆற்றிய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவ மாணவியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் விடுதலைப் போராட்ட வரலாற்றின் சுருக்கமான பகுதி பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது.