"கூட்டணி வரும், கவலைப்பட தேவையில்லை" - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சூசக தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 9:19 AM IST

thumbnail

ஈரோடு: பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி அதிமுக நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், "எல்லோரும் நினைக்கிறார்கள், எப்போது கூட்டணி வரும் என்று. 

கூட்டணி வரும் கவலைப்பட தேவையில்லை. அதற்கான காலம் வரும். நம்முடைய தாயை மட்டும் தான் அம்மா என அழைப்போம், ஆனால் உலகத்தில் வாழ்ந்த அனைவரும் அம்மா என அழைக்கக் கூடியவர் புரட்சித் தலைவி. 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் அம்மா. ஜெயலலிதா தலைமையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 234 தொகுதிகளிலும் கூட்டணியே இல்லாமல் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. 

அதில் வெற்றியும் கண்டோம். முன்பு வாக்குச்சீட்டில் வாக்களித்தீர்கள். அப்போது தாளவாடியில் எதிர்க் கட்சிக்காரர்கள் 16 ஆயிரம் வாக்குகளை வாக்குச்சீட்டில் அவர்களே போட்டு விட்டனர். இன்றைய நிலை வேறு. தொடக்க காலத்தில் அதிமுக வேட்பாளராக 25 ஆயிரம் பேர் காலில் விழுந்து வாக்குக் கேட்டேன். 

மக்களை நேசிக்கும் போது, மக்களை வணங்கும் போது தான் மக்கள் நம்மை நேசிக்கின்றனர். ஆகையால் மக்களின் அன்பை பெற்றால் தான் வெற்றி கிட்டும். வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெறுவோம். 2026 ஆம் ஆண்டு அதிமுக வென்று எடப்பாடி முதலமைச்சராவார்" என்று தெரிவித்தார். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.