அரூரில் தீரன் சின்னமலையின் முழு உருவ சிலை திறப்பு விழா!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 10:42 AM IST

thumbnail

தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூரில் கொங்கு திருமண மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட சங்கத்தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா ஆளுநருமான சதாசிவம் கலந்து கொண்டு, சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் விழா மேடையில் பேசிய முன்னாள் ஆளுநர் சதாசிவம், "விடுதலைப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை, சிறந்த புரட்சியாளர் மற்றும் போராளியாக விளங்கினார். அவர் புகழை நிலை நாட்டும் வகையில், மத்திய அரசு தபால் தலையை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு, அவருக்கு மணிமண்டபம் மற்றும் நினைவு இல்லங்கள் அமைத்து பராமரித்து வருகிறது.

தமிழகத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில், பல்வேறு குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் போர் ஏற்படும். போர் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்புகள் அனைத்தும் மக்கள் தலையில் விழும். ஆனால், கொங்கு நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் இந்த முறைக்கு மாற்றாக செயல்பட்டனர் என்று கூறினார்.

மேலும், தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதி குறித்த வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. இதேபோன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டாவிற்கு வாக்களிக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டது. விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் அனைவரும் போற்ற வேண்டும்" என்று கூறினார். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.