குன்னூரில் சுற்றித் திரிந்த காட்டு யானைகள்: சாலையைக் கடக்க வழி அமைத்த வனத்துறையினர்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 9:18 PM IST

thumbnail

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்த நிலையில், வனப்பகுதிகள் பசுமை நிறைந்து காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த பத்து நாட்களாகக் குட்டியுடன் கூடிய 10 காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் சுற்றித்திரிகின்றனர்.

அந்த வகையில் பர்லியார், மரப்பாலாம், குறும்பாடி ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த காட்டு யானைக் கூட்டத்தை குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கே.என்.ஆர் பகுதியில் யானைகள் சாலையைக் கடந்தது.

இதனை அடுத்து, வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்திக் காட்டு யானைகள் செல்ல இடையூறு இன்றி யானைகளைச் சாலையைக் கடக்க வழிவகை செய்தனர். மேலும், குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்கி செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். காட்டு யானைகளைக் கண்டவுடன் அருகில் சென்று செல்பி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், வாகனங்களில் அதிக ஒலி எழுப்ப வேண்டாம் எனவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

மேலும், உள்ளூர் வாசிகள் மற்றும் பழங்குடியினர் யானைகளைக் கண்டவுடன் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் தனியாக வனப்பகுதி வழியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.