ஒகேனக்கலில் ரூ.11 கோடி வளர்ச்சி திட்ட பணிகள்: பொங்கலுக்கு தயாராகுமா..? மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
Published : Nov 5, 2023, 10:40 PM IST
தருமபுரி: ஒகேனக்கல் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள் ரூபாய் 11 கோடியில் நடைபெற்று வருகிறது. இதில், ஒகேனக்கல் நுழைவு வாயில், உணவருந்தும் இடம், எண்ணெய் தேய்க்கும் இடம், பரிசல்கள் நிறுத்துமிடங்கள், ஊட்டமலை அருகே மஞ்ச கொடம்பு பகுதியில் கட்டப்பட்டு வரும் இருளர் இன மலைவாழ் மக்களுக்கான குடியிருப்புகள், காய்கறிகளின் மூலம் உரம் தயாரிக்கும் இடம், முதலைப் பண்ணை பகுதியில் கட்டப்பட்டு வரும் கழிப்பிடங்கள், உடை மாற்றும் அறை, புதுப்பிக்கப்பட்டு வரும் வண்ண மீன்கள் காட்சியகம் ஆகியவற்றை நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை இன்று (நவ.4) தருமபுரி மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கதிரேசனிடம் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை, பணிகள் முடிவுறும் காலம் ஆகியவற்றினை கேட்டறிந்து விரைந்து பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து வெள்ளப் பெருக்கால், தும்பசிக்கல் பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பார்வையாளர்கள் உயர் கோபுரத்தினை புதிதாக அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டார்.
இதற்கு முன்னதாக ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் பல சிறப்பு முகாமை பார்வையிட்டு, புதிதாகச் சேர்ந்துள்ளவர்களின் விபரம், அவர்களிடம் இருந்து பெறப்படும் ஆவணங்கள், இணையத்தின் மூலம் பதிவு செய்யும் முறைகள் குறித்துக் கேட்டறிந்தார். இந்த ஆய்வுகளின் போது பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா, ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, ஊராட்சி செயலர் குமரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.