மூஞ்செல்லாம் உடைச்சுடுவேன்..! திருவண்ணாமலை நகராட்சியில் கவுன்சிலர்கள் மோதலால் பரபரப்பு

By

Published : May 19, 2023, 1:07 PM IST

thumbnail

திருவண்ணாமலை: நகர மன்றக் கூட்டம் நேற்று திருவண்ணாமலை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 39 வார்டுகளில் இருந்து திமுக, அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்று தனது வார்டுகளில் உள்ள குப்பைகளை அகற்றுமாறு நகராட்சி சேர்மன் மற்றும் கமிஷனரிடம் முறையிட்டனர்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் முறையாக எந்தவித நடவடிக்கையையும் நகராட்சியின் சார்பில் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினர். குறிப்பாக திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்வதில்லை, அதிலும் அதிமுக கவுன்சிலர்கள் உள்ள வார்டுகளில் கால்வாய் வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் நகராட்சியின் சார்பில் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டி அதிமுக கவுன்சிலர்கள் பேசினர்.

அப்போது இடைமறித்த திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் அதிமுக கவுன்சிலரை பார்த்து நகர மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் மத்தியில் ''முகத்தை உடைத்து விடுவேன், போயா, வாயா'' என அதிமுக கவுன்சிலர்களை ஒருமையில் மிரட்டியதால் கவுன்சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பானது.

இது குறித்து பேட்டி அளித்த அதிமுக கவுன்சிலர் பழனி,'' திமுக கவுன்சிலர்கள், தங்கள் வார்டு பிரச்சினைகளை பேசும் போது இடைமறித்து தங்களை பேசவிடாமல் அவ்வப்போது இடையூறு ஏற்படுத்தி தங்களை அவமதிப்பு செய்து வருகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் இதே போன்று அணுகுமுறையை திமுக உறுப்பினர்கள் கடைபிடிக்கின்றார்கள்.

ஒன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் கோவிந்தன் அதிமுக கவுன்சிலரை பார்த்து முகத்தை உடைப்பேன், போயா, வாயா என தங்களை மிரட்டியதை தாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்'' என அதிமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிகழ்வு நகர மன்றக் கூட்டத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.