மல்லிகைப்பூ அலங்காரத்தில் தேர்பவனி.. களைகட்டிய பூண்டி மாதா பேராலய திருவிழா!
தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளியில் பழமைவாய்ந்த பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. பசலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்தில் ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் ஒருபகுதி இக்கோயிலில் பக்தர்களின் அருளிக்கமாக வைக்கப்பட்டுள்ளது.
அதாவது இத்தாலி நாட்டை சேர்ந்த கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்ற வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த 6 ஆம் தேதி துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் திருப்பலிகள் நடைபெற்று வந்தது. அதேபோல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.
அதில் மல்லிகைப்பூ மற்றும் மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட இந்த தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி புனிதம் செய்து தேரினை தொடங்கி வைத்தார். அப்போது அங்குக் கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் மரியே வாழ்க எனப் பக்தி கோஷமிட்டு மாதாவை வழிபட்டனர். இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை மீண்டும் வந்தடைந்தது.
மேலும் இவ்விழாவில் மறைமாவட்ட முதன்மை குருக்கள் அமிர்தசாமி, இன்னொசென்ட் துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ் தலைமை வகித்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.