பவானிசாகர் அணைப்பகுதியில் பறவைகளைத் துரத்தி குறும்பு செய்த குட்டி யானை..!
Published : Dec 24, 2023, 11:07 PM IST
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணை நீர்த்தேக்கப் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக பவானி சாகர் அணையின் கரையில் நடமாடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று (டிச.24) மாலை இரண்டு காட்டு யானைகள் மற்றும் இரண்டு யானை குட்டிகள் என மொத்தம் நான்கு யானைகள் பவானி சாகர் அணையின் கரையோரத்தில் நன்கு வளர்ந்துள்ள புற்களை மேய்ந்தபடி சுற்றித் திரிந்தன.
அப்போது அங்கு இருந்த சிறிய யானை குட்டி குறும்புத்தனமாகக் கீழே படுத்துக்கொண்டு தரையில் உருண்டு விளையாடியதோடு யானைகளைச் சுற்றிலும், புழு பூச்சிகளைத் தீவனமாக உட்கொண்டிருந்த வெள்ளை நிற கொக்குகளை யானை குட்டி துரத்தியபடி விளையாடியது.
குழந்தை போல் யானை குட்டி அங்கும் இங்கும் ஓடி ஆடிய காட்சி கண்களைக் கவரும் விதமாக அமைந்திருந்தது. யானை குட்டி அங்கும் இங்கும் ஓடுவதைக் கண்டு பதட்டம் அடைந்த தாய் யானை, குட்டியைச் செல்லமாகக் கண்டிப்பதைப்போல எங்கும் ஓடாதபடி அரவணைத்து நின்றுகொண்டு புற்களைத் தீவனமாக உட்கொண்டன.