அண்ணாமலையார் கோயில் ஆவணி மாத பிரதோஷம்.. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 7:46 AM IST

thumbnail

Tiruvannamalai annamalai temple: திருவண்ணமலை: ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திபகவானை வழிபட்டனர்.

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு,  ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. 

அப்போது பெரிய நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரம் லிட்டர் பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு விதமான வண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை நடைபெற்றது.

பிரதோஷ தினத்தின் பொழுது நந்தி பகவானை வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும் என்பதும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்கும் என்பதும் ஐதீகம். இந்த பிரதோஷத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று பெரிய நந்தி பகவானை வழிபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.