பவளக்கொடி கும்மியாட்டக் குழுவின் 54வது அரங்கேற்ற விழா.. கும்மியாடிய பெண்கள், சிறுவர்கள்!
திருப்பூர்: அழிந்து வரக்கூடிய பாரம்பரிய தமிழ் கலையான கும்மி கலையை, மீட்டெடுக்கும் முயற்சியில் ஏராளமான குழுவினர் கொங்கு மண்டலம் முழுவதும் பெண்கள், சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து அரங்கேற்ற நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் - தாராபுரம் சாலை பெருச்சிபாளையம் வினோபா நகர் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்டக் குழுவினர் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்களுக்கு ஒரு மாத காலத்திற்கு மேலாக பயிற்சி அளித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று 54வது அரங்கேற்ற விழா வினோபா நகர் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோயில் மைதானத்தில் நடைபெற்றது. பவளக்கொடி கும்மியாட்டக் குழுவின் ஆசிரியரும் ஒருங்கிணைப்பாளருமான அம்மன் விஸ்வநாதன், மூத்த ஆசிரியர்கள் அருணாச்சலம், பரமசிவம், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வள்ளி, முருகன், விநாயகர் பெருமான் துணையோடு திருமணம் செய்தது முதல் ஏராளமான பாடல்களை மெட்டுக்களோடு பாடினர்.
பாடலுக்கு ஏற்றவாறு ஒரே மாதிரியான சீருடை அணிந்த சிறுவர் மற்றும் பெண்கள் உள்ளிடோர் நடனமாடி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தினர். இவ்விழாவில் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.