ஒகேனக்கலில் நீர்வரத்து இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு!
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த 4 தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 90 ஆயிரம் கனஅடி ஆக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து தற்போது அதிகரித்து இரண்டு லட்சத்து 10ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் ஊட்டமலை, நாடார் கொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்டப்பகுதிகளில் காவிரி ஆற்றின் அருகே உள்ள குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளை சுற்றி தண்ணீர் புகுந்துள்ளது. தர்மபுரியில் இருந்து பென்னாகரம் ஒகேனக்கல் வழியாக அஞ்செட்டி செல்லும் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் இச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் கவனமாக செல்ல அப்பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST