இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி செய்வது மிகவும் பொதுவானது. ஆனால், எந்த வகையான உடற்பயிற்சி செய்தால் இதயத்திற்கு சிறந்தது, அது எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என சில விஷயங்கள் உள்ளது.
இந்த உடற்பயிற்சியின் தாக்கம் குறித்து பல கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றில் சில நியாயமானவை என்றாலும், பல தவறானவையே. அத்தகைய கட்டுக்கதைகளில் ஒன்றுதான், மாரடைப்பிற்குப் பிறகு உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது.
மாரடைப்புக்குப் பிறகு முதல் சில வாரங்களுக்கு உடற்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்படலாம். இருப்பினும், உடற்பயிற்சி செய்வதன் மூலம் அனைத்து வகையான நோய்களில் இருந்தும் மேம்படலாம் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மாரடைப்பிற்குப் பிறகு, கூடுதல் இதய பிரச்சினைகளின் வாய்ப்பைக் குறைக்க ஒரு வழக்கமான செயல்பாட்டுத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி திட்டம், டயட் (Diet), வாழ்க்கைமுறை மாற்றங்கள் போன்றவை மூலம் பெரும்பாலான நோயாளிகளுக்கு இதய மறுவாழ்வுக்கான மருந்து வழங்கப்படுகிறது.
உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் ஒருவர் பின்பற்றக்கூடிய சில வழிகாட்டுதல்கள்;
- உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும். உங்கள் இதய நோய், அதன் நிலை, இதய செயல்பாடு போன்றவற்றின் அடிப்படையில் உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒரு உடற்பயிற்சியை பரிந்துரைப்பார்.
- உடற்பயிற்சியை மெதுவாகத் தொடங்குவது மிக நல்லது. நீங்கள் தொடர்ந்து நடக்கப் பழகிவிட்டால், காலப்போக்கில் படிப்படியாக உங்கள் வேகத்தை அதிகரித்துக்கொள்ளலாம். மூச்சுத் திணறல் ஏற்பட்டால், நடைபயிற்சி வேகத்தைக் குறைப்பது நல்லது.
- உடற்பயிற்சி செய்யும்போது எப்போதும் வார்ம் அப் (warm-up), வேகமான பயிற்சி (peak exercise), சாந்த நிலை (cool down) என மூன்று கட்டங்களாக செய்யப்பட வேண்டும்.
- முதல் நாளில் 10 நிமிடங்களுக்கு மிதமான வேகத்தில் நடப்பது நல்லது. தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களில் நடக்கும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். ஒரு நாளுக்கு 30 நிமிடங்கள் நடப்பது மிக நன்று.
- உடற்பயிற்சியை முடித்தபின், ஒருவர் கடைசி மூன்று நிமிடங்களுக்கு நடையின் வேகத்தை மெதுவாக குறைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- நோயாளிகள் அவர்களது வீட்டின் அருகேயே நடப்பது நல்லது. அல்லது வீட்டிற்கு வெளியே நடந்தால், முன்னெச்சரிக்கையாக ஒருவரை உதவிக்கு அழைத்துச்செல்ல வேண்டும். அவர்கள் வெகுதூரம் செல்லக்கூடாது.
- நீங்கள் நடக்கத் தொடங்குவதற்கு முன் நீரிழப்பைத் தடுப்பதற்காக ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- நீங்கள் விரும்பும் ஒரு உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக்ஸ் செய்வது போன்றிருக்க வேண்டும்.
- உடற்பயிற்சிக்காக அதிக இடையை தூக்குவதற்கு முன்பு, கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
- உடல் வலிமை பெற அனைவரும் உடற்பயிற்சி தவறாமல் செய்யப்பட வேண்டும். வாரத்தில் ஆறு நாள்கள் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- தினமும் ஒரே நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.
- உடற்பயிற்சி செய்யும்போது ஒருவருக்கு மூச்சுத் திணறல், படபடப்பு போன்ற அறிகுறிகள் தோன்றி, அது போகவில்லை என்றால் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு கட்டாயம் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
- நோயாளிகள் தங்களை குணப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வைத்திருப்பது முக்கியம்.
- ஒரு இதய நோயாளி, மாரடைப்பிற்குப் பிறகு மென்மையான உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு நோயாளிக்கும் அறிவுறுத்தப்படும் உடற்பயிற்சியின் அளவு இதய நிகழ்வுக்கு முன்பு நோயாளி எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தார் மற்றும் நிகழ்வு எவ்வளவு தீவிரமானது என்பதைப் பொறுத்தது.
ஒருவர் மாரடைப்பிற்கு பிறகு தங்கள் ஆற்றலையும், வலிமையையும் திரும்பப் பெற வேண்டும் என நினைத்தால் அவர்கள் கட்டாயம் உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: தினமும் 7,000 அடி நடந்தால் எமனும் அஞ்சுவான்