ETV Bharat / state

விருதுநகர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021: எதிர்பார்ப்புமும் களநிலவரமும்...!

author img

By

Published : Apr 4, 2021, 5:33 PM IST

விருதுநகர் தொகுதிகள் வலம்
virudhunagar district watch

தென்தமிழ்நாட்டில் கெளசிக நதியின் கரையில் அமைந்திருக்கிறது விருதுநகர். மானாவாரி நிலப்பரப்பையும், மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் சில பகுதிகளையும் ஒருசேரக் கொண்ட மாவட்டம். பிற்கால பாண்டியர்களின் ஆளுகையில் மதுரைக்குக் கீழிருந்த விருதுநகர், பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் நாயக்கர்கள், முகமதியர்களைத் தொடர்ந்து கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு கீழும் இருந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் ராமநாதபுரம் மாவட்டதில் இருந்த விருதுநகர், நிர்வாக வசதிக்காக கடந்த 1985ஆம் ஆண்டு தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. அப்போது அது கர்மவீரர் காமராஜர் மாவட்டம், பின்னர் விருதுநகராகப் பெயர் மாற்றப்பட்டது. தமிழ்நாட்டில் பட்டித்தொட்டி எல்லாம் பள்ளிகள் திறந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர், இந்த மாவட்டத்தில் பிறந்தவர். வைணவ மதத்தில் புகழ்பெற்ற பெண் ஆழ்வாரான திருப்பாவை அருளிய ஆண்டாள், அத்வைத நெறியைப் போதித்த ரமணமகரிஷி விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவர்களே. 'குட்டி ஜப்பான்' என அழைக்கப்படும் சிவகாசி, நெசவுக்குப் பெயர் போன ராஜபாளையம், தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் நடக்கும் சாத்தூர் போன்றவை மாவட்டத்தின் தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்த பகுதிகள். அர்ஜுனா, வைப்பாறு, கெளசிக நதி ஆகிய பருவக்கால சிற்றாறுகளே விருதுநகரின் முக்கிய ஆறுகள். இன்றும் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படும் சதுரகிரி மலை மாவட்டத்தின் ஆன்மிக அடையாளம். விருதுநகரின் 6 விழுக்காடு பகுதி வனங்கள். இங்குள்ள செண்பகத் தோப்பு பகுதியில் சாம்பல் அணில்களுக்கு சரணாயம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் திருவில்லிபுத்தூரில் உள்ள சிற்பங்களே இல்லாத 12 நிலை கோபுரம், தமிழ்நாடு அரசின் லச்சினையாக உள்ளது. இத்தனை சிறப்புகளைக் கொண்ட விருதுநகர் பொறித்த எண்ணெய் பரோட்டாவுக்கும், திருவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கும், சாத்தூர் காரசேவு ஆகிய உணவு பண்டங்களுக்கும் சிறப்பு பெற்றது. விருதுநகரின் தற்போதைய எல்லைகளாக வடக்கில் மதுரை மற்றும் சிவகங்கை, தெற்கில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி, கிழக்கில் ராமநாதபுரம் மாவட்டங்களும், மேற்கில் கேரள மாநிலம், வடமேற்கில் தேனி மாவட்டமும் அமைந்துள்ளன.

வாசல் :

தென்மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரமான விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தனித் தொகுதி உட்பட ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டது.

தொகுதிகள் உலா:

ராஜபாளையம்: மாவட்டத்தில் முக்கியமானத் தொகுதி ராஜபாளையம். நூற்பாலைகள் அதிகம் உள்ள தொகுதி. இங்கு உற்பத்தியாகும் மருத்துவப் 'பேண்டேஜ்'கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆயத்த ஆடையான நைட்டி உற்பத்தி அதிகம். நாட்டு நாய் இனத்திற்குப் பெயர் பெற்ற ராஜபாளையம் மாம்பழத்திற்கும், சப்போட்ட பழத்திற்கும் புகழ் பெற்றது.

பஞ்சு கொள்முதல் விலையை சீராக வைத்திருக்க வேண்டும் என்பது ராஜபாளையம் நெசவாளர்களின் கோரிக்கையாகும். நகரில் நடைபெறும் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்; புறவழிச்சாலை அமைக்க வேண்டும்; தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, கைத்தறி பூங்கா அமைக்க வேண்டும்; குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும் என்பன ராஜபாளையம் தொகுதிவாசிகளின் கோரிக்கை.

திருவில்லிபுத்தூர் (தனி): பெண் ஆழ்வாரான ஆண்டாள் வளர்ந்த ஊர். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தேரைக் கொண்ட ஆண்டாள் கோயில், 200 ஆண்டுகள் பழமையான இந்து மேல்நிலைப் பள்ளி, 140 ஆண்டுகள் பழையான புத்தூர் பென்னிங்டன் நூலகம் தொகுதியின் மற்ற சிறப்புகள் என்றால், பால்கோவா உணவு சிறப்பாகும்.

இங்குள்ள மேற்கு மலைத்தொடரில் உள்ள செண்பகதோப்பில் சாம்பல்நிற மலை அணில்களுக்கான சரணாலம் இருக்கிறது. தனித்தொகுதியாக இருந்து பொது தொகுதியாக மாற்றப்பட்ட திருவில்லிபுத்தூர், கடந்த 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் தனி தொகுதியானது.

பிரதான தொழில் விவசாயம். பிளவக்கல், கோமுகி அணைகள் இந்தத் தொகுதியில் உள்ளன. நெசவுத் தொழிலுக்கு அரசு சலுகை அளிக்க வேண்டும்; வெல்லம் தயாரிக்கும் தொழிலை ஊக்குவிக்க வேண்டும்; தேரோடும் வீதியை பராமரிக்க வேண்டும்; அழகர் அணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; மூடப்பட்டிருக்கும் கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்; மலைவாழ் மக்களான பளியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்; தொகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பவைகள் தொகுதியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள்.

சாத்தூர்: காமராஜரை இரண்டு முறை வெற்றி பெற வைத்து முதலமைச்சராக்கிய தொகுதி. கடந்த 1957, 1962 சட்டபேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று காமராஜர் முதலமைச்சரானார். சாத்தூர் அருகில் இருக்கும் புகழ்பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தொகுதியின் ஆன்மிக சிறப்பு.

மை ஊற்றுப் பேனா பிரபலமாக புழக்கத்தில் இருந்த போது, இந்தத் தொகுதியில் மை ஊற்றுப் பேனா நிப் தயாரிக்கும் தொழிற்சாலை இங்கு அமைந்திருந்தது. தற்போது தீப்பெட்டி, பட்டாசு தொழில் பிரபலம். மிளகாய் வற்றல் உற்பத்திக்கும் பிரபலமான தொகுதி இது. தொகுதியின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும்; புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்; சிப்காட் அமைக்கப்பட வேண்டும்; இருக்கன்குடி அணையை பராமரித்து குடிநீர், விவசாயத் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும்; தீப்பெட்டித் தொழில் நலிவடையாமல் பாதுகாக்க வேண்டும்; தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன தொகுதிவாசிகளின் கோரிக்கை.

உள்ளூரில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் சாத்தூர் காரசேவுக்குப் புவிசார் குறியீடு பெற வேண்டும் என்பது தொகுதி மக்களின் விருப்பம்.

சிவகாசி: 'குட்டி ஜப்பான்' என அழைக்கப்படும் சிவகாசியின் பெயரைக் கேட்டதுமே எண்ணத்தில் வண்ண வண்ண பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்து விடும். நாடு முழுவதிற்கும் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளுக்கும் பட்டாசு ஏற்றுமதி செய்யும் தொகுதி சிவகாசி. பட்டாசு உற்பத்தி பிரதானமான தொழில்.

கூடவே தீப்பெட்டி, அச்சுத்தொழிலும் நடைபெறுகிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வால் தீப்பெட்டி தொழிலும், காகிதங்களின் விலையேற்றத்தால் அச்சுத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்து தொகுதியின் பிரதான பிரச்னைகளில் ஒன்று.

இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்; வெடி விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்கும் வகையில் சிறப்பு காப்பீடு திட்டம் கொண்டுவர வேண்டும் என்பது பட்டாசு தொழிலாளர்களின் வேண்டுகோளாகும். பட்டாசு நலவாரியம் அறிவிப்பு வெளியானது இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

விருதுநகர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021: எதிர்பார்ப்புமும் களநிலவரமும்...!

சிவகாசி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற வேண்டும்; அங்கு பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் நியமிக்கப்பட வேண்டும்; தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காண வேண்டும் என்பன சிவகாசி தொகுதியின் தேவைகளாகும். இந்தத் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேந்திர பாலாஜி அமைச்சரானார்.

விருதுநகர்: முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த ஊர். கடந்த 1967ஆம் ஆண்டு தேர்தலில் சொந்த தொகுதியில் அவர் தோற்கடிக்கப்பட்டது அரசியல் விநோத முரண்களில் ஒன்று. விருதுநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மானாவாரி பயிர்கள் விளைகின்றன. வணிகர்கள் அதிகமுள்ள விருதுநகர் சந்தையில் தான் பல்வேறு பொருட்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

ஏலக்காய், மல்லி, வத்தல், பருப்பு வகைகள் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கல்வியில் சிறந்து விளங்கும் விருதுநகர் மாவட்டத்தில் கலைக்கல்லூரிகள், என்ஜினியரிங் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை. இளைஞர்கள் வேலை வாய்ப்புகளுக்காக வெளியூர்களுக்குச் செல்கின்றனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு, இந்தப் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம், தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்க எடுத்த முயற்சி, நடவடிக்கை பலன்தரவில்லை. அறிவிக்கப்பட்ட சிப்காட் பயன்பாட்டுக்கு வரவில்லை. தொகுதியின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி, நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண வேண்டும் என்பது விருதுநகர் மக்களின் நீண்டகால கோரிக்கையாகவுள்ளது.

அருப்புக்கோட்டை: முழுவதுமாக கிராமங்களைக் கொண்ட தொகுதி. காமராஜரை முதலமைச்சராக்கிய பெருமை அப்போதைய சாத்தூர் தொகுதிக்கு உண்டு என்றால், எம்ஜிஆரை வெற்றி பெற வைத்து முதலமைச்சராக்கிய பெருமை அருப்புக்கோட்டைக்கு உண்டு. எம்ஜிஆர் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுதான் முதலமைச்சரானார்.

இந்தத் தொகுதியின் பிரதானத் தொழில் விவசாயம், நெசவு. தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு முக்கியமான பிரச்னை. வைகை குடிநீர் திட்டம் பெயரளவிலேயே உள்ளது. விசைத்தறிகள் அதிகம் உள்ளதால், ஜவுளிப்பூங்கா ஒன்று அமைக்கப்பட வேண்டும்; சாயப் பட்டறைகளை முறைப்படுத்த வேண்டும்; இங்குள்ள வியாபாரிகளின் வசதிக்காக அருப்புக்கோட்டை வழித்தடத்தில், சென்னைக்கு அதிக ரயில்களை இயக்க வேண்டும்; இங்குள்ள அரசு மருத்துவமனையில் இதயம், எலும்பு அறுவை சிகிச்சைக்குத் தனித்தனி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன தொகுதி மக்களின் கோரிக்கைகளாகும்.

திருச்சுழி: தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தொகுதி இது. கிராமப்புறங்களை கொண்ட தொகுதி. விவசாயமே பிரதானத் தொழில். சீமைக் கருவேல மரங்களை வெட்டி கரிமூட்டம் போடும் தொழில் நடக்கிறது. பெரிய தொழில் வாய்ப்புகள் இல்லாத தொகுதி திருச்சுழி.

பின்தங்கிய பகுதியாக உள்ளது. கம்பிக்குடி நிலையூர் கால்வாய் திட்டத்தின் பணிகள் மதுரை வரை மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்தத் திட்டம் முழுமையடையும் போது, விவசாயம் செழிப்படையும். இந்தத் தொகுதியில் அரசு கல்லூரி, தொழில் நுட்பக்கல்லூரி தொடங்கப்பட வேண்டும்; தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தினை முறைப்படுத்த வேண்டும்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்; திருச்சுழியில் இருந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல நேரடி பேருந்து வசதிகள் செய்து தர வேண்டும்; பேருந்து நிலையம் கட்டித்தர வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் கோரிக்கைகளாகும்.

களநிலவரம்:

காமராஜரையும், எம்ஜிஆரையும் வெற்றி பெற வைத்து முதலமைச்சராக்கிய மாவட்டம். காமராஜரைத் தோற்கடித்தும், தந்தை மகனை எதிர் எதிர் அணியில் நிறுத்தியும் அரசியல் ஆச்சரியங்களை நிகழ்த்தும் மாவட்டம் விருதுநகர். விளைச்சல்கள் இல்லை என்றாலும், தானியங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது, அவைகளை ஏற்றுமதி செய்வது என வணிக(ர்) நகரமாக விளங்குகிறது விருதுநகர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ள பட்டாசு ஆலை பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டியது; ஜவுளிப்பூங்கா, தொழில் மண்டலம் உருவாக்கி புதிய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவது; வேலைவாய்ப்புகளை தரும் தீப்பட்டி தொழிலை நலிவடையாமல் பாதுகாப்பது என உடனடி தீர்வு காணப்பட வேண்டிய பிரச்னைகள் விருதுநகரில் வரிசை கட்டி நிற்கின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஏழு தொகுதிகளில், நான்கில் திமுகவும், மூன்றில் அதிமுகவும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த முறை அதிமுகவில் வாய்ப்பு எதிர்பார்த்து காத்திருந்து கடைசி நேரத்தில் வாய்ப்பளிக்கப்படாததால் எம்எல்ஏ உட்பட இருவர் அதிமுகவில் இருந்து விலகி, அமமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.

இரண்டு முறை வெற்றியைத் தந்த சிவகாசி தொகுதியைத் தவிர்த்து விட்டு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். உள்ளூர்காரர்களையே தோற்கடித்து வேடிக்கை காட்டிய மாவட்டத்தில் வெளியூர்காரர்களை களமிறக்குகிறது தேசியக் கட்சி. பரபரப்புக்கும், விநோதங்களுக்கும் பஞ்சமில்லாத விருதுநகர், இந்த முறை காட்டவிருக்கும் வேடிக்காக மே முதல்வாரம் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.